பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இறைவன் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்தான் என்றால் அதைப் பிட்டுத் திருநாளாக்கி நெய்ப் பிட்டாக்கி அல்லவா மகிழ்ச்சியடைகின்றோம். மண் சுமந்ததை மறந்து விடுகிறோமே. இறைவனின் செயல் தோற்றம் நம் வாழ்க்கையில் கலந்திருக்கிறதென்றால், இறைவனே வந்து மண் சுமக்கிறான் கொஞ்சம் பிட்டைக் கூலியாகப் பெற்றுக் கொண்டு என்ற வரலாற்றை வைத்துக்கொண்டு, உழைப்பில் இழிவில்லை; எல்லோரும் உழைக்க வேண்டும். பதிலாகத் தேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பண்பியல்பல்லவா வளர்ந்திருக்க வேண்டும். வளர்ந்திருக்கிறதா?

பாரதியார் தேசிய கீதம் பாடினார். மறுமலர்ச்சி பாடினார் - இறைமையைப் பாடினார். நம்மைப் பொறுத்த வரை இம்மூன்றுக்கும் அப்படியொன்றும் அதிகப்படியான வேறுபாடு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. தேசீயம் - நிலம் - மறுமலர்ச்சி - செயற்பாடு - பயன் - இறைமைத் தன்மை எனவே எல்லாம் ஒரே வட்டம்தான். இதை முறையாகச் சொன்னவர் பாரதியார்.


பாரதி அமைத்த பாலம்


பழமையிலுள்ள உயிர்ச் சத்தான கருத்துக்களை வாழ்க்கைக்கு உறுதி பயக்கும் கருத்துக்களை - நலன் விளைவிக்கும் கருத்துக்களைப் பாரதி மறுக்கவில்லை - ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை. தந்தை தோண்டிய கிணறு நல்ல கிணறாக இருந்தால் புதிய கிணறு தேவையில்லை என்பது பாரதியாரின் கருத்து.

மனிதன் நாளுக்குநாள் பண்பாட்டால் - நாகரிகத்தால் வளர்கிறான் - வளரவேண்டும். அதுதான் நியதி முறை. வளர வேண்டிய மனிதன் உழைக்கவில்லையானால், சிந்திக்க வில்லையானால், அவனுடைய உடலும் வளராது -