பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

209


இவை ஏதோ மாஜினி எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையையுமே அறிவிக்கும் சாதாரண ஒரு செய்தியல்ல; பாரதியும் வெறும் பத்திரிகை நிருபர் அல்ல. ஆனால் மக்களைத் தலைமை தாங்கி இட்டுச் செல்லும் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களையும் அவர்கள் கொள்ள வேண்டிய பிரதிக்ஞையையுமே இதன் மூலம் செம்மையாக அறிவுறுத்துகிறார். கடமை தவறிய தலைவர்கள் ஆண்டவனுடைய கோபத்திற்கும் பொது மக்களின் இகழ்ச்சிக்கும் தவிர்க்க முடியாத பல தண்டனைகளுக்கும் ஆளாவர் என்பதைச் சுட்டிக்காட்டி கடமையாற்றும் நெறியிலே தலைவர்களுக்கு நல்ல வழி காட்டுகிறார் பாரதி.

மக்களை மக்களாகக் கருதவேண்டும்; அவர்களின் உணர்ச்சியையும், உரிமையையும் மதிக்க வேண்டும்.

"நாட்டு மாந்தர் எல்லாம்-தம்போல்
    நரர்களென்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று-உலகை
     அரசர் எண்ணிவிட்டார்”

என்று சர்வ சுதந்திரப் போக்கைக் கண்டிக்கின்றார், பாரதி. அத்துடன் அமைதியில்லை பாரதிக்கு. ஆம், பார்க்குமிடம் எங்கணும் நீக்கமற அப் பரனையே தரிசிக்கும் பண்பாளன் பாரதி. அதனால் உயிர்கள் அனைத்தும் கடவுளின் உருவம். கடவுளின் பிள்ளைகள் என்று மதித்துப் பரிவுடன் ஏன் பக்தியுடனே பணிபுரிய வேண்டும் என்று கூறகிறார். வெறும் அறவுரைக்காகக் கூறுவதைவிட அங்ஙனம் வாழ்ந்து சிறந்த தலைவர் ஒருவரை உதாரணமாகக் காட்டுவதே நலமெனத் தெளிந்து காந்தியடிகளை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பாட்டைப் பார்ப்போம்.

"மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம்
      கடவுளின் மக்கள் என்று உணர்தல்