பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேச பக்தர்கள் தக்க தலைமையின் கீழ்க் கட்டுப்பட்டு நாட்டுக்கு உழைத்தலையே தவமெனக் கொண்டு பணி செய்து வருகின்றனர். சில சமயங்களில் அசுரர்கள்-தேச பக்தர்களாக நடிக்கலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு நடவாது.

அசுரர்களைப் பற்றி, கவலைப்படாமல்-சிந்திக்காமல் தேச பக்தர்களின் தொண்டு நடைபெற வேண்டும். தேச பக்தர்கள் இடர்களையும் துன்பங்களையும் கடந்து தேச பக்தியில் நிலைப்பட்டு நிற்கிறார்கள். தேச பக்தர்களுக்கு வெற்றி உறுதி. இது பாரதியின் முடிபு.

நாம் சுதந்திரம் கேட்பது எந்தச் சாதியினருக்கும் மதத்தினருக்கும் அல்ல! பாரத தேவிக்காகவே சுதந்திரம் கேட்கப்படுகிறது.

பாரத தேவியின் பாரதம் பிரிவினைப்படாத பாரதம்! அகண்ட பாரதம் நாட்டு மக்களின் எதிர்கால மகத்தான இலட்சியம். பாரத நாட்டை மக்கள்தான் ஆள வேண்டும். இதுவே, பாரதியின் சிந்தனை, செயல்!

பாரதி, பழைமையில் காலூன்றி நின்றவன். அதே போழ்து, பின்னே வரும் புதுமையை வரவேற்றவன். பழைய மரத்தில்தானே புதிய புதிய தளிர்கள் துளிர்க்க வேண்டும்!

மரத்தில் துளிர்க்கும் ஒவ்வொரு துளிருக்கும் ஒரு மரம் இயல்பா? அல்லது சாத்தியமா? இல்லை, இல்லை! அது போலப் பழைமை வாய்ந்த புகழ்மிக்க இந்து சம்பிரதாயத்தைப் பாரதி நம்புகிறான். அதே போழ்து பின்னைப் புதுமைகளையும் வரவேற்கிறான்.

இந்து நாகரிகம் என்று பாரதி போற்றுவது பண்பு நலம் சார்ந்த பழைய மரபினையே! அதே போழ்து நடைமுறைக்கு இசைந்து வாராதவற்றையும் சமுதாய விரோதமானவற்றையும் வெறுக்கிறான். புதிய மதம் உருவாக்க முயலுகிறான்; புது விதிகள் செய்கிறான்.