பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோட்டை” என்ற தத்துவார்த்தக் கதை மூலம் தெளிவாக விளக்குகிறான். அந்தக் கதையைக் கேளுங்கள்!

பாரத தேசத்தவராகிய நாம் பஞ்சகோணக்கோட்டை கற் சுவர்கள் நாலும் மேலான சாதிகள்! மண்சுவரே பஞ்சமர் என்ற ஐந்தாம் சாதி, கோட்டையைச் சுற்றியுள்ள அகழி சுதேசி அபிமானம்! பஞ்சமர்களை அநாதரவும் கொடுமையும் நிறைந்த முறையில் நாம் நடத்தி வரவில்லையா? இது நியாயமா? இந்த ஒடுக்குமுறை சுதந்திரப் போராட்டத்துக்கு அனுசரணையாக அமையுமா? என்றெல்லாம் வேதனைப் பட்டு எழுதுகிறான்.

"கடவுள் எல்லோரையும் சமமாகவே படைத்தான். கடவுள் முன்னிலையில் சாதி வித்தியாசம் நிற்குமா? பஞ்சமர்களை நாம் நடத்திய கொடுமைகளுக்கு ஈடாக நம்மை ஆங்கிலேயர்கள் துன்புறுத்துகின்றனர்.

நாம் பஞ்சமரை ஆதரித்து அவர்களுக்குக் கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அனுசரிக்கும்படி செய்து அவர்களையும் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களா?" என்று பாரதி கேட்கிறான்!

பாரதியின் இந்த வினாவுக்குரிய விடையைச் சுதந்திர அரசு தந்தது. ஆனால், இந்து சமூகம் தரவில்லை. இந்து சமூகம் பஞ்சமர்களை அணைப்பதன் மூலமே வளரும்; வாழும்!

பாரதி, சாதிகளை வெறுப்பவன். ஒன்றுபட்ட பாரத சமுதாயம் பாரதியின் இலட்சியம். இந்தக் கொள்கையினை "ஆவணி அவிட்டம்” என்ற கட்டுரையில் விளக்குகிறான்! நெஞ்சினைத் திறந்து வீரப்ப முதலியார் மூலம் பேசுகிறான். "பூணுலை எடுத்துப் போடுங்கள்! இந்தியா முழுவதும் ஒரே ஜாதி! ஒரே ஆசாரம்!” என்று செய்துவிட வேண்டும் என்கிறான்.