பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




சிவாஜிக்குப் பிறகு, நமது நாட்டில் வீரர்கள் தோன்றவில்லை என்று பாரதி வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை போன்ற நிர்வாகிகள், துணைவர்கள் கூட கிடைப்பதில்லை என்று வருந்துகிறான். ஆனந்தரங்கம் பிள்ளை, பிரான்சு நாட்டுத் தலைவன் டூப்ளேக்கு, விளக்கு போலவும் ஊன்றுகோல் போலவும் விளங்கினார்.

பாரதி, துறவைப் பல இடங்களில் கண்டிக்கிறான். துறவு வாழ்க்கையை மறுதலிக்கிறான். ஏன்? வாழ்க்கையை மாயை என்று கூறுவதையும் பாரதி மறுக்கிறான். ஆன்மாவின் வாழ்க்கை நிலையானது; சாசுவதமானது என்று பாரதி போதிக்கிறான்.

நமது பாரத நாட்டில் சில நூற்றாண்டு காலமாகவே துறவைப்பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். கண்டவன் எல்லாம் ஞானம் பற்றிப் பேசுகிறான். வயிற்றுப் பிழைப்புக்காக-சில காசுகளுக்காக உடலையும் ஆவியையும் விற்கத் துணிபவன் கூட ஞானம் பேசுகிறான்.

வாழ்க்கை மாயை என்கிறான். "எல்லாம் மாயை, இவ்வுலகமே பொய், கூடிணத்தில் அழிவது இல்வாழ்க்கை” என்று தனக்குத் தெரியாதவைகளைக் கூட கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறுகிறான்.

இந்த பொய்யைப் பாரதி நம்ப மறுக்கிறான்; ஏற்க மறுக்கிறான். வாழ்தலைப் பற்றிய வேட்கையைத் துரண்டி வளர்க்க முயற்சி செய்கிறான். இந்த உலகம் நிலையானது என்று நம்பி வாழ்ந்து இந்த மண்ணையே சொர்க்கமாக்க, பாரதி நம்மை அழைக்கிறான்.

இந்த உலகம் நிலையானது. இங்கு பாங்குற வாழ்தலே சிறப்பு. செத்த பிறகு சிவலோகம் யாருக்கு வேண்டும்? இங்கு அமரர் சுகம் வேண்டும்! இது பாரதியின் ஆசை.

பாரதி, திருவள்ளுவரைப் பின்பற்றிச் "செய்க பொருளை" என்று நெறிப்படுத்துகிறான். நாடு நலம் பெற நல்ல கல்விச் சாலைகள் தேவை; தொழிற் சாலைகள் தேவை.