பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல் வாழ வேண்டும்: என்றும் பேசுகிறார். இங்கு சற்று நுட்பமாகக் கவனிக்க வேண்டும். பிறரைக் கொல்லாமல்கூட அல்ல; கொல்ல நினையாமல் என்று கூறுகின்றார். உள்ளத்தால் உள்ளலும் தீது என்ற வள்ளுவர் வாக்கை பாரதியார் இங்கு நமக்கு நினைவுறுத்தி உள்ளத்தாலும் ஒழுக்கமுடையவனாக வாழு என்று வலியுறுத்துகிறார். இதுதான் இறைமை.

இன்றைய சமுதாயம் நைந்து மடிந்தாலும் இனிவரும் தலைமுறையாவது நைந்து மடியாமல் இன்ப வாழ்வு பெறுதல் வேண்டும்; மலர்ச்சி பெற வேண்டும் என்று பாரதி விரும்பினார். இதுதான் மறுமலர்ச்சி.

தேசியம் என்ற சொல்லே ஆழமான-அகலமான பொருள் பொதிந்த ஒரு சொல் ஒரூர்-ஒரு நாடு என்ற நிலையின்றி தானுண்டு, தன் வீடுண்டு என்றிருந்த நிலையை மாற்றி, நீ பெரிதன்று-உமது விடும் பெரிதன்று இந்த ஊரும் நாடுந்தான் உயர்ந்தன-பெரியன என்று உணர்த்தினார். அதுதான் தேசியம்.

பாரதியாருக்கு முன்னே நமக்கு ஜில்லா உணர்ச்சி, சாதி உணர்ச்சி இப்படித்தானிருந்தது. பாரதி இந்நிலையை மாற்றி, இந்தியத் தேசியம் கூட அல்ல-உலக தேசியத்தையே பாடியிருக்கிறார். மனிதன் வாழும் உரிமை பெற்றவன்; ஒருவரைச் சரண்டாமல்-அட்டை போல உறிஞ்சாமல் அவன் மனிதனாகவே வாழ வேண்டும் என்றார் அவர். தேசியம் என்பதிலே, மறுமலர்ச்சியும், இறைமைத் தன்மையும் விரவிக்கலந்து கிடக்கின்றன.

நமது நாட்டில் இன்று இறைமைத் தன்மையின் பேரால் ஆடுகின்ற பேயாட்டம் மிகமிகக் கொடியதாக இருக்கின்றது. இங்கு இறைமைத் தோற்றமும் காட்சியும் இருக்கிறதே யொழிய இறையின் செயல் வாழ்வில் ஊடாடி வளரவில்லை.