பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி அமைத்த பாலம்

297



"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை-மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

என்றார் வள்ளுவப் பெருந்தகை வள்ளுவரும், கம்பரும் இளங்கோவும் இலக்கிய உலகில் பாரதிக்குத் தந்தையராக விளங்குகின்றனர். எனினும் அவர்களைக் காட்டிலும் சில இடங்களில் பாரதி மேலோங்கி நின்றார் என்பதை நாம் ஏற்கத் தயங்கக்கூடாது. ஆங்கில இலக்கியமேதை ஜார்ஜ் பெர்னாட்ஷா உலக நாடகப் பேராசிரியரான ஷேக்ஸ்பியரையும்விடத் தாம் வளர்ந்திருப்பதாக ஒரு சமயம் தம்மைப் புகழ்ந்து எழுதியிருந்தார். இதையொட்டி அவருக்கு எதிர்ப்புத் தோன்றியது. அதற்குப் பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் தரை மட்டத்தில் நின்று கொண்டார்-நான் அவர் தோள்மீது ஏறி நின்று கொண்டு தொடுகிறேன் என்று அழகாக- சுருக்கமாக ஆனால் தெளிவாகப் பதில் கூறினார். முதல் சால் உழும் போது ஏற்படுகின்ற புழுதியைவிட இரண்டாவது சால்உழும்போதுதானே அதிகப் புழுதி ஏற்படுகிறது?

பாரதி, பண்டை கருத்துவழி நின்றே புதுமையைக் கண்டார். பழமைக் காலத்திற்கேற்ப-கருத்து வளர்ச்சிக்கேற்பமாறி வளர்ந்துதான் புதுமையாகிறது. ஒன்று பண்டைக் காலத்தில் தோன்றியது என்பதாலேயே அது பழமையாகிவிடாது. இன்று முளைத்தது என்பதாலேயே ஒன்று புதுமையாகிவிடாது. பழமைக்கும் புதுமைக்கும் காலம் அளவுகோல் அன்று. ஒரு கருத்து காலத்தால் மிக மூத்ததாக, பழமையானதாக இருந்தாலும் இன்றைய வாழ்க்கைக்கு உதவுவதாக-ஏற்புடையதாக இருக்குமானால் அதைப் புதுமையானதாகவே எண்ணிப் போற்ற வேண்டும்; ஒரு கருத்து நேற்று முளைத்ததாக இருந்தாலும், இன்றே தோன்றியதாக இருந்தாலும் வாழ்வியலுக்கு ஒத்ததாக-உறுதி பயப்பதாக-நலன் விளைவிப்பதாக இல்லையானால் அதைப் பழையது என்று கருதி ஒதுக்கித் தள்ளத்தான் வேண்டும்.