பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உபதேசம் அரசியல் தவைலர்களுக்கு மட்டுமல்ல. சமுதாயம், சமயம், அறநிலையங்கள், மடாலயங்கள் முதலியவற்றின் தலைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது. துறவியினுடைய இலட்சணம் இவ்வுலகப் பொருள்களிடத்துப் பற்றின்றி வாழ்வதேயாம். ஆனால் தன்னைச் சார்ந்துள்ள-தன் நாட்டிலுள்ள மக்களை மறத்தல் அன்று. அறிவும், ஒழுக்கமும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்கள் நலம்பெற வாழ வழிகாட்டிப் பணி செய்வதையே கடமையெனக் கொண்டவர் துறவிகள் என்பது கதே என்ற தத்துவ ஞானியின் அறிவுரை, "ஞானிகள் முயல வேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று; உலகத்தை அறியவேயாகும்" என்பது அவர் மொழி, ஈண்டு உலகம் என்பது மக்களையே குறிக்கின்றது. உலக மக்களின் நிலையறிந்து, தேவையறிந்து அவர்கள் வளர வேண்டுவன செய்யக் கடமைபட்டிருக்கிறான் உண்மையான துறவி. அதையே பாரதி "பிறர்க்கன்றி தனக் குழையாத் துறவியாவேன்" என்று சொல்லி விளக்குகிறார். இத்தகைய துறவிகள் இந்த நாட்டிலே பெருகுவார்களானால் இம்மண்ணுலகமே விண்ணுலகமாய் மாறிவிடும்.

சில இடங்களில் பாரதியார் ஆண்டவனை நோக்கிச் செய்யும் தமது பிரார்த்தனையின் மூலம் தலைவர்களுக்குச் சிறந்தவழியைப் புகட்டுகிறார். பாரதியார் தமது சுயசரிதையைப் பாடி முடித்தபின்பு இறுதியாகப் பரம்பொருளிடம் ஒரு சில வேண்டுகிறார். அவற்றைப் பார்ப்போம்.

"அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே
அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசானை, பொழுதெல்லாம்
நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல்,
என்றிவை அருளாய்; -