பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

317



ஒரு கொள்கை என்றால் முன்னுக்குப் பின் முரண்பாடு இருக்கக் கூடாது. இன்றைய கடவுட் கொள்கையில் முரண்பாடுகள் அதிகம். “ஒன்று பரம்பொருள்" "அம்மையப்பரே. உலகுக்கு அம்மையப்பர்” என்பர். ஆயினும் மக்கள் குலத்தில் ஒரு பாதியைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்குதல் நியாயமா, இந்த முரண்பாட்டில் என்ன சிறப்பிருக்கிறது? என்பது பாவேந்தன் வினா.

ஏக பரம்பொருள் என்பதை நோக்க
எல்லாரும் உடன்பிறப்பே-ஒரு
பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி
லே, உள்ள தோசிறப்பு?

(பாரதிதாசன் கவிதைகள்)

என்பதும் அவன் வினா.

தனக்குவமையில்லாதவன் இறைவன். அதாவது அறிவில், ஆற்றலில், நிறைவில் இறைவனுக்கு நிகர் இறைவனேயாம். இத்தகு ஆற்றல் வாய்ந்த இறைவனைத் தாழ்த்தப்பட்ட குடிமகன் தீண்டினால் என்ன? இறைவனின் ஆற்றல் குறையுமா? அப்படி ஆற்றல் குறையுமானால் தாழ்த்தப்பட்டோனின் ஆற்றலன்றோ மிகுதியாகத் தெரிகிறது. ஆம்! தாழ்த்தப்பட்டோர் ஒருவர் இறைவனைத் தீண்டினாலும் புண்ணியாவசனம்-தூய்மை செய்கிறார்கள்-பிராயச்சித்தமும் செய்கிறார்கள் புரோகிதர்கள். ஆதலால், யாருடைய ஆற்றல் பெரிதென நையாண்டிக் குரலில் பாவேந்தன் கேட்கின்றான்.

"தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்தில்லையோ?-எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்தில்லையோ?”

(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 3 சமத்துவப்பாட்டு 14)