பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

335


"ஏறு! விடாமல் ஏறு! ஏறு மேன்மேல் ஏறு!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய் அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கம மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ண உன்! உடுத்த உடுப்பாய்
புகல்வேன்! உடைமை மக்களுக் குப்பொது!
புவியை நடத்து! பொதுவில் நடத்து."

(பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1
"உலகம் உன்னுடையது" வரி 26-40)


என்ற கவிதை வரிகள், கவிதை வரிகள் மட்டுமல்ல. மானுடத்தின் நல்வாழ்வுக்குரிய வரிச்சட்டம்!மறைசாசனம்! இந்த வரிகளை நாம் உணர்வுடன் ஏற்று நடைமுறைப் படுத்தினால் நாடு வளரும். பாவேந்தனின் நூற்றாண்டிலிருந்து செய்ய எண்ணுவோமாக!

வீடு, வீதி, நாடு ஆகிய எல்லைகளைக் கடந்த மனிதனை மாமனிதனை பாவேந்தன் படைத்துக் காட்டு கிறான். ஆம்! இது அணுயுகம்! இன்று நாடுகளையும் கடந்த மனிதன் தேவை! மாமனிதன் தேவை! அப்போதுதான் போரைத் தவிர்க்க இயலும் மக்கள் குலம் "என்குலம்", "என் கோத்திரம்" என்ற சிறு சிறு சுழிகளுக்குப் பதிலாக "மக்கள் குலமே என் குலம்’ என்பது அற்புதமானது.