பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம் அந்நி லத்தில்
புல்விளைந் திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை”

(குடும்ப விளக்கு)

என்கிறான் கவிஞன்.

கவிஞனின் இந்த வாக்கு வெற்றி முரசம் ஆர்ப்பது எப்போது? இன்றும் நமது நாட்டில் உள்ள பெண்களின் கல்விநிலையை எண்ணுங்கள்! விழிமின் மகளிர் குலத்திற்குக் கல்வி வழங்குமின்!

பெண், தனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அனைத்தையும் திறமையாகச் செய்வாள் என்பது பாவேந்தனின் கருத்து! குடும்ப விளக்குக் காப்பியத் தலைவியின் வாணிகத் திறனை நோக்குங்கள்.

"களிப்பாக்குக் கோட்போர்க் கீந்து
களிப்பாக்கிக் கடனாய்த் தந்த
புளிப்பாக்கி தீர்ந்த பின்பு
கடனாகப் புதுச்ச ரக்கை
அளிப்பார்க்குப் பணம் அளித்தாள்
................"

"இளகிய நெஞ்சத் தாளை
இளகாத வெல்லம் கேட்பார்
அளவாக இலாபம் ஏற்றி
அடக்கத்தை எடுத்து ரைப்பாள்
மிளகுக்கு விலையும் கூறி
மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல் புகன்ற வண்ணம்
புடைத்துத் துரற்றிக் கொடுப்பாள்"

(குடும்ப விளக்கு-பக். 23)