பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இங்குக் கணவன் காட்டும் அன்பை, அருள் என்று பாவேந்தன் கூறுவது ஏன்? அருள் என்பது தொடர்பிலார் மாட்டுச் செல்வது என்ற பழைய உரை வழக்கு என்னாவது? என்று கேட்கலாம். இல்லை, இல்லை! அன்பின் முதிர்ச்சியே அருள்! கைம்மாறும், கடப்பாடும் எதிர்பாராதது அருள்! அதுபோல் தனது கணவனின் காதலொழுக்கம் இருத்தல் வேண்டும் என்று மனைவி எண்ணுவதில் தவறில்லை யல்லவா?

முதியோர் காதல்

ஆகா! பாவேந்தனின் குடும்ப விளக்குக் காப்பியத்தில் முதியவர்கள் காதல் பகுதி மிகவும் சிறந்த பகுதி. படிக்குந் தோறும் இன்பமூட்டுவது. கிழவன் கூறுகிறான், தன் காதலி "கிழவி இருக்கின்றாள் என்பதொன்றே தனக்கு இன்பம்" தருகிறது என்று! எவ்வளவு அன்பின் முதிர்ச்சி!

அறைவீடு - கழகம்

தமிழர் வீடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று பாவேந்தன் வழிகாட்டுகிறான். வீட்டின் அறைகள் தமிழ்க் கழகம் போல் விளங்க வேண்டும். மேலும் வீடுதோறும் நூலகம் அமையவேண்டும். அந்த நூலகத்தில் பழைய நூல்களும் புதிய நூல்களும் கலந்திருக்கவேண்டும். நூல்கள் மட்டும் போதுமா? இந்த யுகம், செய்தித்தாள் யுகமல்லவா? செய்தித்தாள்களும் இருக்கவேண்டும். கவிஞனின் பொன்னுரைப்படி எப்பொழுது தமிழர் இல்லங்கள் இயங்கும்?

"பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்
அவள் வாத்திச்சி. அறைவீடு கழகம்
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை"

(குடும்ப விளக்கு - பக். 8)

என்றும்,