பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!
எல்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும். விடுதலையாம்”. .
(பாரதிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி பக்.5)


பழம்பஞ்சாங்கம் கிழியட்டும் !

பழைய பஞ்சாங்கம்! ஆம்! மானிடத்தில் பல்வேறு சாதி, குலப் பிரிவுகளை ஏற்படுத்தி, வெவ்வேறு நியாயங்கூறிய பழைய பஞ்சாங்கம்! மாந்தரில் ஒரு பிரிவினருக்குக் கல்வியை மறுத்த பழைய பஞ்சாங்கம்! ஏழ்மை - வறுமை ஆகியவற்றிற்குத் தலைவிதியைக் காரணம் காட்டிய பழைய பஞ்சாங்கம். இந்தப் பழைய பஞ்சாங்கம் கிழிக்கப் பெறுதல் வேண்டும். எல்லார்க்கும் கல்வி வழங்கப் பெறுதல் வேண்டும். தான் கற்று, கல்லாத மற்றவர்க்குக் கல்வி நல்க முன்வராதார் எவரானாலும் அவரைக் கழுவேற்றுக என்பது பாவேந்தனின் ஆணை! ஆம்! எல்லார்க்கும் கல்வி நல்குவது சமூகத்தின் பொறுப்பு: கடமை! இதுவே, பாவேந்தனின் குறிக்கோள்! எல்லாரும் எல்லாவற்றையும் அடையவேண்டும். இது பாவேந்தனின் தணியாத ஆசை!

"எல்லார்க்கும் எல்லாம்என் றிருப்ப தான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்!
கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் துரக்குமரம் அங்கே உண்டாம்!
இல்லாரும் அங்கில்லை! பிறன் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே!
நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில்!
நமக்கென்ன கிழியட்டும் பழம்பஞ் சாங்கம்!
(பாண்டியன் பரிசு-பக்.99)