பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17


அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

இந்திய நாட்டு வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பொற்காலமாகும். இந்த நாடு விடுதலை பெற்றதும் இந்த நூற்றாண்டே! இணையற்ற மனித குலச் சிற்பிகளான அமரர் அண்ணல் காந்தியடிகளும் அமரர் நேருஜியும் வாழ்ந்தது இந்த நூற்றாண்டேயாம்.

தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வரும் நம்முடைய நாட்டுக்கு அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் ஓருருவம் கொண்டாற்போல திகழ்ந்த ஈடு இணையற்றவராக விளங்கும் அருமை அண்ணா தோன்றியதும் இந்த நூற்றாண்டேயாம்.

இந்த நாட்டு வரலாற்றில் அறிஞர் அண்ணா ஒரு மையம்; ஒரு திருப்பு முனை, அவர் ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவித்து இருக்கிறார். அவர் கண்ட தலைமுறை - தம்பியருலகு - தமிழுலகு இணையற்ற உலகு; அன்பில் விளைந்த உலகு; ஆர்வம், நிறைந்த உலகு; நண்பென்னும் நாடாச் சிறப்பு நிறைந்து நிலவும் உலகு. இத் தலைமுறை தாழாது உயர்வதாக! தமிழுலகு சிறப்பதாக!

அறிஞர் அண்ணா, இயல்பிலேயே சிந்தனையாளர்; நுண்மாண நுழைபுலம் மிக்கவர். மணம் வீசும் மலர்; தமிழர்