பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடன்பட்டால், மாறி வந்தால் முன்னுள்ள கீழ் ஜாதியிலேயே சேர வேண்டுமாம்! இது என்ன நியாயமோ? இந்த அநீதியை தில்லை நடராஜனும், சீரங்க நாதனும் தாங்கிக் கொண்டிருப்பது எதனாலோ நமக்குப் புரியவில்லை” என்று கனல் கக்கக் கண்டிக்கிறார்.

'பார்வதி, பி.ஏ.'யில் இடுக்கண் உற்ற நிலையிலும் கூட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட ஒரு தமிழ்க் குழந்தையை - ஜாதி, இனம், மொழி, எண்ணம் படியாத பச்சைக் குழந்தையை ஏற்று வளர்க்க பெங்களூர் பார்ப்பனச் சேரி ஆண்டாள் அம்மாளுக்கு மனம் துணியாத ஜாதி வெறியை அண்ணா சுவையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழ்க் குழந்தையை வளர்ப்பது பாவமாகவும், பொய் சொல்லிக் கணவனை ஏமாற்றுவது புண்ணியமாகவும் தெரிகிறது. அந்தப் புண்ணியவதிக்கு, "சூத்திரர் வீட்டுக் குழந்தையை என் குழந்தேன்னு கூறி எங்க ஆத்திலே வளக்கிறது மகா பாவ காரியம்னு நேக்கு பயமாயிடுத்து, அதுக்காகத்தான் அவரிடம் சொப்பனம்னு கதை சொன்னேன்” என்று ஆண்டாளைப் பேச வைத்து ஜாதி அமைப்பின் இறுகிய நிலையைப் புலப்படுத்துகிறார்.

"உயர் ஜாதிக் குடியினரும் சிறப்பாக சமரச ஞானம் பேசுவார்கள். அதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள். ஆனால், எல்லாம் பேச்சளவில்தான். செயலில் இம்மியும் இல்லை. காரணம், இந்த பாகுபாட்டு முறைகள்தான் சிலரை வாழ்விக்கிறது அதை எப்படி இழப்பார்கள்?', என்று கேட்கிறார்.

அண்ணா சமுதாயத்தில் நிலவும் ஜாதி வேறுபாட்டு முறைகளை மாற்றியமைக்க விரும்புகிறார். ஆனால், பொருளியல் சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாத வரை ஜாதி வேறுபாடுகளை முற்றிலும் நீக்க முடியாது என்பதையும் உணர்கிறார்.