பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிஞர் அண்ணாவின் நிலைமையும் இதுவே என்று கருதுகிறோம். ஆயினும் தனது படைப்புத் திறனில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளார். இந்த வித்தியாசத்தை "ரோமாபுரி ராணி" யைப் படிப்பவர்களும் "பார்வதி, பி.ஏ" யைப் படிப்பவர்களும் தெளிவாக உணர முடியும்.

முன்னையதைப் படைக்கும் காலத்தில் அவர், தீமையை மட்டும் கண்டு தீமையை மட்டும் விமர்சித்து அழிக்கும் முகாமில் இருந்தார். பின்னர் அவர் தீமையை அழிப்பதோடன்றி நன்மையை உருவாக்க வேண்டுமென்ற கருத்தில் ஈடுபட்டார்.

இந்த வளர்ச்சி மனப்போக்கை 'பார்வதி, பி.ஏ.' என்ற கதையில் நாம் தெளிவாகக் காண்கிறோம். 'பார்வதி, பி.ஏ' யில் விரச உணர்ச்சியே இல்லை. அறிவு உணர்வுகளே தலைதூக்கி நிற்கின்றன. சமூகப் போராட்டங்களே வேரூன்றி உள்ளன. இஃது அவருடைய தலையாய படைப்பு. தமிழர்கள் தவறாது படிக்க வேண்டிய படைப்பு.

"ரோமாபுரி ராணிகள்" படைப்பிலும் மிகச் சிறந்த இனிய தத்துவங்களை எடுத்துக்காட்டத் தவறிவிடவில்லை. நோயை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. மருந்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் வெறுப்பு என்ற நோய் பிடித்த விமர்சகர்கள் அவர் மருந்தைக் கண்டு காட்டியை எடுத்துக்காட்டத் தவறி விட்டார்கள்.

"பெண்களுக்குச் சரியான சமத்துவமும், சுதந்திரமும் வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் வரை அவர்களுடைய அழகு ஆபத்தாகவே முடிகிறது. ஆனாலும் ஏழை அபலைகளாக இருக்கிற பெண்கள் இந்த ஆயுதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் தவிக்கின்றார்கள்” என்று எழுதிக் காட்டியுள்ளார்.

'ரோமாபுரி ராணி'களில், பெண்களைச் சம உரிமையுடன் கருதாமல் இன்பத்துக்குரிய எண்ணரிய பொருள்-