பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

423


அறிஞர் அண்ணா "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்ற புத்தகத்தில் "ஜனநாயக முறையில் ஈடுபட்ட தலைவர்களாக - அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே மண்டைக்கனம் கொண்டுவிடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

அறிஞர் அண்ணா 1967 பொதுத் தேர்தலில் ஆட்சிக்குரிய தகுதியுடையவராக வெற்றி பெற்ற போது, மிடுக்காகப் பேசாமல், அடங்கிப் பேசிய பண்பும், தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் விடு தேடிச் சென்று ஒத்துழைப்புத்தர வேண்டிக் கேட்டுக் கொண்டமையும் இந்திய நாட்டு வரலாற்றிலேயே இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.

இந்தப் பண்பு மூலம் அவரது படைப்புக்கு, அவருடைய இலக்கியத்துக்கு, அவரே இலக்கியமாக இருப்பது நெகிழ்ந்து பாராட்டக்கூடியது.

அண்ணல் காந்தியடிகளிடத்தில் அறிஞர் அண்ணாவுக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாடு காலத்திற்குக் காலம் மாறியும் வந்திருக்கிறது என்பதிலே உண்மையுண்டு. ஆனால், ஈடுபாட்டை யாரும் மறுக்க முடியாது.

'உலகப் பெரியார் காந்தி' என்ற நூலில் நமது தலைமுறையின் வேலை. "இந்த நாட்டை - காந்தி நாடாக்குவது” என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார். அண்ணாவின் வார்த்தைகள் இதோ! அப்படியே படித்துப் பாருங்கள்.

"ஏழை. ஈடேறி ஏழை உரிமை பெற்று விளங்கும் நாடு மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற நிலையில்லாத நாடு எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு - இந்த நாடு; காந்தி நாடு - காண்பது தான் நமது தலைமுறைக்கு உள்ள வேலை" என்பது அவர் வாக்கு இதனை உணர்ந்து, ஓயாது உழைப்பது அண்ணாவின் - நாண்மங்கல விழாப் பரிசு!