பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'பட்டுக்கோட்டை'யின் பாடல்கள்

431



விளங்கும் அகில உலக மீது.
நீயில்லாத இடம் ஏது”

என்று பாடுகிறார். பாடல் படிக்கப் படிக்க இன்பமாக இருக்கிறது. மிக உயர்ந்த சித்தாந்தத்தை, மிக எளிமையான சொற்களால் விளக்கும் ஆற்றல் உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.

கோயில்களில் பொருளாட்சி ஆதிக்கம் செலுத்தும் அவல நிலையையும் அவர் சாடுகிறார். காசு கொடுத்தால் வழிபாடு கிடைக்கும். இல்லையானால் இல்லை. கோயிற் கதவுகள் பூட்டப்பட்டு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் என்று அநீதியைக் கண்டிக்கிறார்.

"காசு தந்தால்தான் உன்னைக்
காணும் வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?"

என்று கேட்கிறார். பாடலின் கருத்தை யார்தான் மறுக்க முடியும். இங்ஙனம் இருக்கும் குறையை எடுத்துக் காட்டுவது நாத்திகமா? ஆத்திகமா? கவிஞர் பதில் சொல்லிவிட்டார். காலம்தான் விடை காண வேண்டும்.

கவிஞர் இந்த உலகத்தின் விசித்திரமான போக்குகளைக் கண்டு சிரிக்கின்றார்-சிந்தனை செய்கிறார். வெற்றி தோல்விகளைக் கணக்கிடுகின்றார். பொதுப்பணி உலகத்தில் வேண்டிய எல்லாம் ஒருங்கமையாத-அமைத்துக் கொள்ள முடியாத பொருந்தாச் சூழ்நிலையை விளக்குகின்றார். சிலரிடத்தில் ஆற்றல் இருக்கிறது. ஆனால் உண்மையில்லை. உண்மை இருக்கிறது. அவர்களிடத்தில் ஆற்றல் இல்லை. இவ்விரண்டும் இருந்தால் சமுதாயம் ஏற்றுகொள்வதில்லை. இந்தப் பொருந்தா வேறுபாடுகளைக் கவிஞர் நினைந்து நினைந்து நமக்கு நினைவு படுத்துகின்றார்: