432
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
"எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால்
சொல்விலே உண்மையில்லை
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம்
உணர்த்திடும் திறமையில்லை
உண்மையும் நம்பவைக்கும் திறனும் அமைந்தவனை
உலகம் ஏற்பதில்லை"
என்று பாடுகிறார். பொருந்தா வேறுபாடு இவ்வளவு தானா? மேலும் தொடர்கிறார் கவிஞர்:
பொதுப்பணியில் ஈடுபட்டு நல்லன செய்ய விரும்புவோர்க்குக் கையில் காசில்லை. செல்வம் இருப்போர்க்குப் பொதுப்பணியில் நினைப்பில்லை. எல்லாவற்றுக்கும் மேல், பொதுப்பணியில் நினைப்பும் செய்து முடிக்கத் தேவையான செல்வமும் இருந்தாலும், காரியத்தை செய்து முடிக்க நல்ல கூட்டாளிகள் கிடைப்பதில்லை என்ற குறையை உணர்ந்து கூறுகிறார். இது, அனுபவ ரீதியான உண்மை.
"பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லை,
பொருளும் புகழும் சேர்ந்த பின்னே
பொதுப்பணியில் நினைவில்லை,
போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்டதிட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லே."
என்கிறார்.
இத்தகு சிறந்த கவிதைகளைத் தந்த, கவிஞர் நிறைநாள் வாழ முடியாமல் போனது தமிழகத்திற்குப் பேரிழப்பேயாகும். வாழ்ந்த நாள் கொஞ்சமேயாயினும், கால வெள்ளத்தைக் கடந்து நிற்கின்ற கருத்துக்கள் நிறைந்த கவிதைகள் பலவற்றைத் தந்திருக்கிறார். மனிதகுலம் வாழுநாள் இக்கவிதைகள் வாழும்! கவிஞன் புகழ் வாழும்!