பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஜெயகாந்தனின் படைப்பாகிய 'கருங்காலியில் ஒருசில வரிகள்: .

"தனிமனித மனச்சாட்சி, சமூக மனச்சாட்சிக்குக் கொஞ்ச காலமாவது கட்டுப்பட்டுத்தான் ஆகணும், அந்த தனிமனிதனின் நியாய வாதம் உண்மையிலேயே தர்மமா இருந்தா அதை நிச்சயம் சமூகம் கொஞ்சம் பொறுத்து ஏற்றுக் கொள்ளும். அப்படியும் சமூகம் ஏற்றுக் கொள்ளலேன்னா அது தர்மம் அல்ல; ஆமாம், தர்மத்துக்கு அதுதான் இலக்கணம்”

ஜெயகாந்தனின் இந்தக் கருத்திற்கேற்ப நாம் சமூகத்தின் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுப்போமா?

சமூகம் என்ற சொல், இன்று கிட்டத்தட்ட சமுதாயத்தின் ஒரு பகுதியை, ஒரு சிறு ஜாதி வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்படுகிறது. ஆனால் இலக்கியங்களில் சமூகம் என்பது மனிதகுலம் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. பாவேந்தன் பாரதிதாசன்,

"ஒன்றே சமூகம் என்றெண்ணார்க்கே! இறுதி! உறுதி! உறவினர் ஆவார் ஒருநாட்டார்-எனல் உறுதி!
பிறவியில் உயர்வும் தாழ்வும் செய்தல் மடமை! -இந்தப் பிழை நீக்குவதே உயிருள்ளாரின் கடமை!”

என்று பாடுவான்!

பாவேந்தன் கருத்துப்படி சமூகம் என்பது நாடு, மொழி, சமயம் கடந்தது. சமூகம் என்பது மாந்தர் கூட்டமேயாம். ஆனால், நமது நாட்டின் சமூக வரலாறு கூறுவது என்ன? மாந்தரிடையே தீண்டாமை, உயர்வு, தாழ்வு என்ற வேற்றுமைகள்! இந்த அடிப்படையிலான பேதா ஒபேதங்கள்! பிரிவினைகள்! இன்று நம் கண்முன் காட்சியளிக்கும் சமுதாயம் ஓருருவும், ஓருணர்வும் உடையதன்று. இதனை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,