பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

77



செய்கின்ற தொழிலில் இழிவே இல்லை என்று கூறுதல் முடியாது. வட்டிக் கடை ஒரு தொழில் தானே? ஆம்! தொழில் தான். ஆனால் அஃது இழி தொழில்தான்! அது போலவே ஒரே தொழில் கூட உயர்வாகவும், இழிவாகவும் விளங்குதல் உண்டு. எழுத்தும் பேச்சும் சிறந்த தொழில்கள். மற்றவர்க்கும் பயன்படும் தொழில்கள். ஆனால், எழுத்தும் பேச்சும் மக்களின் உணர்ச்சிகளைப் பொறுத்ததாக அமையின் இழி தொழில்களாகும். மக்களின் தேவைகளை அறிந்து அமையின் உயர் தொழில்களாகும். தன்னலம் தீது, தன்னலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு வாழ்க்கை வழங்காத, வழங்கும் இயல்பில்லாத தொழில்களை மேற்கொள்வது இழி தொழில்களாகும். தன்னலம் என்பது நஞ்சு, தன்னலம் வாழ்விப்பது போல் காட்டி அழித்துவிடும். தன்னலம் பொது உரிமையில் பொது நலத்தில் பாதுகாப்பாக இருக்கும். பொதுமை சிறப்பாக இல்லாத போழ்து தனித் தன்மையும் கூட இல்லாது அழிந்து போகிறது. அப்பப்பா! தன்னலம் என்ற பேய் பெரிய நாடுகளைக் கூட அடிமைப் படுத்தி வருகின்றது. கோளும் பொய்யும் புறங்கூறலும், காட்டிக்கொடுத்தலும் தன்னலத்தின் நச்சுறுப்புகள். இவைகளை அறவே புறக்கணிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் நாட்டுப் பற்று உடையவராக வாழ்ந்திடுதல் வேண்டும். வாழ்க்கை குறிக்கோளுடையதாக அமைதல் வேண்டும். இன்பத்தைத் தேடி அலையக்கூடாது. இடர்ப்பாடுகளைக் கண்டு அஞ்சுதல் கூடாது. ஆள்வினை யற்று உறங்கி வாழ்தல் கூடாது. செல்வங்கள் பல வழங்கிடும் நாட்டில் ஏழையராக வாழ்தல் கூடாது. தன்னலத்தைத் துறக்க வேண்டும். பொது நலத்திற்குத் துணை நிற்க வேண்டும். தன்னலச் சார்பான தொழில் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் இழி தொழிலேயாம்.

இந்நெறி முறைகளில் நின்று நாட்டினைப் போற்றுக! பணி செய்க!