பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொறிகள் வழியிலேயே செல்லும் மனம், புத்தி, சித்தம் பயன்படாதன; துன்பம் தருவன.

இத்தகு பொறி, புலன்களையுடையோர் உறுதி இல்லாதவர்களாயிருப்பர். பயந்தவர்களாயிருப்பர் கோழை களாகவும் இருப்பர். ஆனால், வாய் மிடுக்கும் இருக்கும். இவர்கள் குரைக்கும் நாய்கள் போன்றவர்களே! தெளிவும் உறுதியும், சிந்தனையுடையாருக்கே உண்டு. இச்சிந்தனையில் நாம் வாழப் பிறந்தவர்கள். வேடிக்கை மனிதர்களாய்ச் சாகக் கூடாது; ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது; கலகப் பூச்சிகளாய் வாழக் கூடாது. அறிவறிந்த ஆள்வினை மேற்கொள்ள வேண்டும். பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். எல்லாரும் ஒரு குலமாய் ஒத்து வாழ்தல் வேண்டும் என்று உறுதி தோன்றிவிட்டால் இந்தியாவிற்கு ஏன் இடர்ப்பாடு? இந்தியர்களுக்கு ஏது.துன்பம்? கொள்கையில் கோட்பாட்டில் தெளிவும் உறுதியும் இருக்குமாயின் எத்துன்பத்தையும் வெற்றி காணலாம். தொகுதி தொகுதியாக வரும் சோதனைகளையும் வெற்றி காணலாம். வாழ்க்கையில் தோல்வி, துன்பம் என்றால் அதற்குக் காரணம் வேறு யாரும் அல்ல. தோல்வியைத் தழுவித் துன்புறுபவர்கள். பழியை யார் மீதாவது போடுவார்கள். ஆனால், அது உண்மையன்று, சித்தம் இருக்கிறது. ஆனால், சிந்திப்பதே இல்லை, ஏன்? அவர்கள் சித்தமே அவர்களை இடித்துக் காட்டலாம். அதனை அறிய விரும்பாதவர்கள் சிந்திக்கப் பயப்படுவார்கள்; சிந்திக்க மாட்டார்கள். வேறு சிலர் எல்லாம் தெரிந்தது தானே என்று சிந்திக்க மறுப்பார்கள். தெரிந்தவையானாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதில் பயன் மிகுதியும் உண்டு. அரைக்க அரைக்க சந்தனம் மணமுடையதாதல் போல் சிந்திக்கச் சிந்திக்க தெளிவு மிகும். சற்றும் குழப்பமும் ஊசலாட்டமும் இல்லாத நிலை தோன்றுவதோடன்றி, புது நெறிகளும் தோன்றும். ஆதலால், சிந்தனையில் உறுதி தேவை.