பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தவிர்த்து மக்கள் ஒற்றுமையாக வாழ்தல் ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சாதிருக்கத் துணை செய்யும்.

அடுத்து, வறுமையும் அச்சத்தைத் தரும். வறுமை என்பது ஒரு கொடிய நோய் வறுமையைத் "தொல்விடம்" என்று திருவாசகம் கூறும். மனிதனின், மனித குலத்தின் பல்வேறு திறன்களை வறுமை அழித்துவிடும். வறுமை கொடிது. வறுமையிலும் கொடியது வேறொன்றில்லை.

வறுமை இயற்கையா? செயற்கையா? வறுமையை அவரவர்களே படைத்துக் கொள்கிறார்களா? அல்லது வேறு யாராவது திணிக்கிறார்களா? உழைக்காத சோம்பேறிகள் தமக்குத் தாமே வறுமையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகையவர்கள் மோசமானவர்கள். உண்ண, உடுக்க ஆசைப்படுவார்கள். ஆனால், உழைப்பதற்கு மட்டும் அவர் களுக்கு மனம் வராது. உடலைக்கூட "ஊர்க்காளை" போல வளர்த்துக் கொள்வர். ஆனால், அவர்கள் மனம் உழைப்பில் நாட்டம் கொள்வதில்லை. இத்தகையோரே வறுமையின் படைப்பாளர்கள். இவர்கள் சமுதாயத்தின் நச்சுப் பூச்சிகள். விழிப்பாக இருந்து ஒடுக்கப்பட வேண்டியவர்கள். உழைப்பிருந்தும் பலர் வறுமைக்குட்பட்டுள்ளனர். இவர் களிடம் உள்ள வறுமை மற்றவர்களால் திணிக்கப்பெற்றது. உழைப்பாளிகளின் வறுமைக்குக் காரணம் உழைக்காத உலுத்தர்கள், மற்றவர்களின் உழைப்பை அட்டை போல உறிஞ்சுவதுதான். இத்தகையோரை எதிர்த்து, தமது நியாயமான பங்கைப் பெறப் போராடும் குணம் வேண்டும். உழைக்கும் வர்க்கத்தினரிடையில் ஒற்றுமை வேண்டும்.

வறுமையில் கிடப்பவர்கள் சிந்தனை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிந்தன்ை - கவலையெல்லாம் "கஞ்சியில்லையே!" என்பதுதான். கஞ்சி இல்லையே என்ற கவலை கஞ்சியைத் தராது. கஞ்சியில்லாததன் காரணத்தை அறிந்து அக்காரணத்தையே தாக்கினால்தான் கஞ்சி கிடைக்கும்.