பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25
அப்பர்

தமிழக வரலாற்றில் ஏழாம் நூற்றாண்டு, ஒரு பொற்காலம்! “இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறே போன்று” அப்பரடிகள் உலாவந்த காலம்! அப்பரடிகள் சிவனடிக்கே பதித்த நெஞ்சுடையவர்; நடையறாப் பெருந்துறவு பூண்டவர்; தொண்டின் திருவுருவமேயாக நடமாடியவர். இன்று இருபதாம் நூற்றாண்டின், புதிய சீர்திருத்தம் என்று பேசப்படும் அனைத்தையும், ஏழாம் நூற்றாண்டிலேயே சிந்தித்துச் செயலாற்றிய பெருமை அப்பரடிகளுக்கு உண்டு.

முடியாட்சியை எதிர்த்து முழங்கியவர்

உலக வரலாற்றில் முடியாட்சியை எதிர்த்து 14, 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கிளர்ச்சிகள் தோன்றின. அமெரிக்காவில் கி.பி. 1783ஆம் ஆண்டிலும் பிரான்சு நாட்டில் கி.பி. 1789ஆம் ஆண்டிலும், சோவியத் ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டிலும்தான் மக்கட் புரட்சி தோன்றியது. ஆனால், நமது அப்பரடிகளோ ஏழாம் நூற்றாண்டிலேயே பல்லவப் பேரரசை எதிர்த்து மனித குலத்தின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்.