பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

119



பல்வேறு பிறப்புக்களில் சுழன்று வந்த உயிர் இப்பிறப்பில் உய்தி பெறத் தவறினால் புழுவாய்ப் பிறக்கவும் நேரிடலாம் என்பது அப்பரடிகளின் கருத்து. “புழுவாய்ப் பிறக்கினும்” என்ற அருள் வாக்கு எண்ணத்தக்கது.

உயிரினத்தில் மனிதப் பிறவிக்கே மனம் உண்டு என்பது பழங்காலக் கொள்கை. நினைப்பதற்கு மனம் வேண்டும். மனமே இல்லாத பிறவியில் எங்ஙனம் நினைக்க முடியும்?

ஆதலால் “இப் பிறவியில் இறைவா உன்னை நினைந்தே என் ஆவி கழியும். கழிந்ததற்பின் என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே” என்றார்.

முன்னே உரைத்தால் முகமனே யொக்கும் இம்மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியும்என் ஆவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய், எம்பிரான் உன்னை வேண்டியதே!

(4.112,3)

என்ற திருப்பாடல் உணர்த்தும் உண்மை அறிக.

முகமன் என்பது முகஸ்துதி. இந்த உலகியலில் முகமனே மிகுதி. உள்ளவாறு பேசுவோர் எண்ணிக்கை குறைவு. முகமனில் சொல்லப்பெறும் புகழுரை உண்மையாகவும் இருக்கலாம்; உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆயினும் முகமன் வசப்படுபவர்களின் எண்ணிக்கையே மிகுதி.

இறைவன் முன்னே, மொழியப் பெறும் புகழ், பொருள் சேர் புகழ். இறைவன் உலகுயிர்களுக்கெல்லாம் தந்தை, தாய் என்பது உண்மை. இது சத்தியம். இதனை இறைவன் திருமுன்பு மொழிதல் அவசியமில்லாதது. ஆனாலும் மக்கள் விடுவதில்லை. முறை கருதி முகமன் என்றார். உண்மையில் இறைவன் முன், மொழிவது முகமன் அல்ல, பொருள்சேர் புகழேயாம்.