பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளுர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே!

(4.60.9)

என்றார். மேலும் “பல்வேறு சமயங்கள் கருதினானை” என்றார். ஆதலால் திருநாவுக்கரசர் சைவ நெறியில் நின்றவர்; அதேபோழ்து உலகின் பல்வேறு சமயங்களிடையேயும் ஒருமை நிலை கண்ட பெருந்தகையாளர்.

திருநாவுக்கரசர் - அப்பரடிகள் என்ற ஞானக் கதிரவனாகத் தமிழகத்தில் உலா வந்தார். தமிழர்களின் சமய உரிமைக்குப் போராடினார்.

புறச் சமயங்களை ஆய்வு செய்தும், நின்று ஒழுகியும் சைவ சமயமே சமயம் எனத் தெளிந்தார்; வாழ்க்கையை மதிக்கக் கற்றுக்கொடுத்தார்; பக்தியும் தொண்டும் உய்வைத் தரும் என்றார். சமுதாய உயர்வு தாழ்வுகளை அகற்றி ஒருமை நலம் காணத் தொண்டு செய்தார்; சமயங்களுக்குள் ஒருமைப்பாடு கண்டார்; போற்றினார்.

இன்று தமிழ்நாடு அடைந்துள்ள இடர்ப்பாடுகளிலிருந்து மீள ஒரே வழி, அப்பரடிகளின் திருவடிகள் தோய்ந்த தடத்தில் செல்வதேயாம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே!