140
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பரிவினாற் பெரியோ ரேத்தும்
பெருவேளுர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்
வகையது நினைக்கின் றேனே!
என்றார். மேலும் “பல்வேறு சமயங்கள் கருதினானை” என்றார். ஆதலால் திருநாவுக்கரசர் சைவ நெறியில் நின்றவர்; அதேபோழ்து உலகின் பல்வேறு சமயங்களிடையேயும் ஒருமை நிலை கண்ட பெருந்தகையாளர்.
திருநாவுக்கரசர் - அப்பரடிகள் என்ற ஞானக் கதிரவனாகத் தமிழகத்தில் உலா வந்தார். தமிழர்களின் சமய உரிமைக்குப் போராடினார்.
புறச் சமயங்களை ஆய்வு செய்தும், நின்று ஒழுகியும் சைவ சமயமே சமயம் எனத் தெளிந்தார்; வாழ்க்கையை மதிக்கக் கற்றுக்கொடுத்தார்; பக்தியும் தொண்டும் உய்வைத் தரும் என்றார். சமுதாய உயர்வு தாழ்வுகளை அகற்றி ஒருமை நலம் காணத் தொண்டு செய்தார்; சமயங்களுக்குள் ஒருமைப்பாடு கண்டார்; போற்றினார்.
இன்று தமிழ்நாடு அடைந்துள்ள இடர்ப்பாடுகளிலிருந்து மீள ஒரே வழி, அப்பரடிகளின் திருவடிகள் தோய்ந்த தடத்தில் செல்வதேயாம்.
- என் கடன் பணி செய்து கிடப்பதே!