பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

155


கிடந்து மரத்துப் போனதால், அந்த இளம் சூடு ஆமைக்குச் சற்று வெது வெதுப்பாக இன்பமாக இருக்கும். இளஞ்சூடு அதற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும். அந்த இளஞ் சூட்டின் இன்பத்தை இணையற்ற இன்பமாகக் கருதி அது அந்த வெந்நீரிலேயே நீந்தித் திளைக்கும். இதனை, ‘உலையை ஏற்றித் தழல் எரிமடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற’ என்று அடுக்கிச் சொல்லுகிறார் அப்பரடிகள். அந்த இன்பம் வெளியே போய்விடாதபடி, அதனோடு ஐக்கியமாகிக் கலந்திருக்கிறதாம். திளைக்கும் என்ற சொல்லால் அதனைத் தெளிவாக உணர்த்துகிறார். ஆமை அந்த இன்பத்தில் ஆடித் திளைக்கும்போது ஓடுவதால் இன்பம் குறைந்துவிடுமோ என்று கருதிக் கொஞ்சநேரம் நிற்கிறதாம். பிறகு நிற்பதால் இன்பம் குறைந்துவிடக்கூடாதே என்று கருதி ஓடுகிறதாம். இந்தக் காட்சியை அப்பரடிகள் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

உலையை ஏற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற
ஆமைபோல் தெளிவி லாதேன்,
இளைத்து நின்றாடுகின்றேன்!

என்று பேசுகிறார் அப்பரடிகள். ஆம்! அந்த ஆமைக்கு அறிவிருந்தது; நீரின் இளஞ்சூடு தெரிந்தது; வெதுவெதுப்பான நீர் இன்பந்தருவதை உணரும் ஆற்றலும் இருந்தது. ஆனால், இப்போது 8 மணிக்கு இளஞ்சூடாக இருக்கிற இளவெந்நீர், 8-30 மணிக்குக் கொதி நீராகித் தன்னை அழித்துவிடும் என்ற அறிவு மட்டும் இல்லை! அதுபோலவே, மனிதர்கள், வாழ்க்கை என்ற அடுப்பிலே, அனுபவம் என்ற பானையிலே, ஆசை என்ற தீ எரிய, உயிர் என்ற ஆமை, பெறுகிற சில பொழுது இன்பத்தைப் பார்த்து ‘ஆகா ஊஹு’ என்று மகிழ்ந்து திளைக்கிறபோது பின்வரும் பெருந்துன்பத்தை