பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

173


10 ஆயிரம் பேர் உணவின்றிச் சாகிறார்கள்” என்று அந்த மாநாட்டில் கூறப்பெற்றது. அப்படியானால் “இம்மையே தரும் சோறும் கூறையும்”, “அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை” என்ற பாடல்கள் நடைமுறைக்கு வருவது எந்த நாள்? ஒன்று நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை மெய்யென்று கூறுகிறோம்; நடைமுறைக்கு வராத போது பொய்யென்றும் கற்பனையென்றும் கூறுகிறோம். ஏன், பழைய சமய இலக்கியங்களை - வரலாறுகளை நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடாது? அன்று திருவீழிமிழலையில் அப்பரடிகள் இறைவனிடம் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கினார். பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்குச் சோறு போட்டார். அதை இந்த 20-ம் நூற்றாண்டில் ஏன் செய்யக்கூடாது என்றால், “அன்று இறைவன் படிக்காசு கொடுத்தார். இன்றும் அப்படிக் கொடுத்தால் பஞ்சம் நீங்கத் தொண்டு செய்யலாம்” என்று சிலர் சொல்கிறார்கள்.

அன்று, அப்பரடிகளுக்குப் படிக்காசு கொடுக்கின்ற நிலையில் இறைவன் இருந்தான். வாங்குகின்ற நிலையில் அப்பரடிகள் இருந்தார். செப்பால் அடித்த ஒரு காசுகூட அப்பரடிகளிடம் இல்லை. அவர், தம் உடைமைகள் என்று சிவபெருமானின் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் பற்றாதவர்.

அப்பரடிகளுக்கு உலகில் எப்பொருளும் இல்லை. இறைவன் கொடுத்தார். அப்பரடிகளிடம் ஆண்டவன் பொருள் வைக்கவில்லை; ஆனால் அருள் வைத்தார். அப்பரடிகள் அவ்வருளால் பாடினார். வேண்டுங்காலத்து இறைவன் வலிய வந்து வேண்டும் பொருளையும் அருளினர். இப்போது செல்வர் பலரிடம் ஆண்டவன் பொருள் வைத்துள்ளார். அவர்கள் அப்பொருளைச் சமுதாயத்துக்கு ஈந்து ஆண்டவன் அருளைப் பெறுதல் வேண்டும். இதுவே அவர் தம் தலைக்கடன். இப்போது பெரும்பொருள் குவித்து