பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பலரும் காணும் திருக்கோயிலென்ன, உயிரிடத்து விளக்கமுற வீற்றிருக்கின்றான். இறைவன், உள்ளத்து இடங்கொண்டமையின் காரணமாக அன்பு ஊற்றுக்கண் திறக்கிறது; உயிரிடத்து ஆற்றல் மிக்க அன்பைத் தூண்டுகிறது; இந்த நிலையில் ‘அன்பும் சிவமும்’ ஒன்றென்ற குரல் எழும்புகிறது. அன்பினாலாவது இன்பமே, அன்பினாலல்லது வன்பினால் ஆவது எப்பொழுதும் இன்பமன்று. அஃது ஒரு சேறு. அன்பு இன்புறுத்துகிறது. அன்பு பெருகி இன்பத்தில் திளைக்கும் பொழுது மேலேது? கீழேது? உயிர், இன்புறுத்தும் பொருளிடத்தும் அடிமையாகிறது. இஃது அறிவியல் அடிமை; உணர்வின்பாற்பட்ட அடிமை. இத்தகைய இறைவன் திருவருளை நினைந்து வாழ முடியாமல் பிற தெய்வங்களை வணங்குவதும், பிற நெறிகளைச் சார்வதும் வேடிக்கையாக இருக்கிறது! அப்பரடிகளே தம் வரலாற்றினை நினைந்து வியந்து பாடுகிறார். முயல், நாட்டில் திரிவது, அதனால் அதைப் பிடிப்பது சுலபம். எளிதில் பிடிக்கக்கூடிய முயலைப் பிடிக்காமல் விட்டுவிட்டு எளிதிற் பிடித்தற்கியலாத காக்கையைப் பிடிக்கக் காக்கையின் பின்னே ஓடித்திரியும் செயலை நினைவுபடுத்துகிறார். காக்கையோ வானில் பறக்கிறது. மனிதனுக்கோ பறக்கும் சக்தியில்லை, எங்ஙனம் பிடிக்க முடியும்?

கையிலிருக்கும் முயலை விட்டுவிட்டுக் காக்கையைப் பிடிக்கப்போவதாகவும் பொருள் கொள்ளலாம். முயல் சிவநெறி; நாம் பிறந்த நெறி, எளிதில் அமைந்த நெறி; இன்றமிழ் நெறி; ஆரத்துய்த்து மகிழத் துணை செய்யும் தூநெறி; இனிய நெறி, எளிய நெறி. இந்நெறிகளில் பிறந்திருந்தும் இந்நெறி நின்று வாழாது பிற நெறிகளைத் தேடியலைவதும் தாயிற்சிறந்த தயாவுடைய நம் சிவன் தாளினைத் தொழாது வேறு தெய்வங்களைத் தேடியலைவதும் காக்கையின் பின் ஓடுவதை யொக்கும்.