பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


13. நமது பழக்கமா?

நமது குமுகாய வாழ்க்கையில் பலர் கூடி உண்ணும் பொழுதும் ஒருவரோடொருவர் பேசாமலேயே உண்கிறோம். உண்ணும்பொழுது பேசுவதைப் பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. அங்ஙனம் பேசுவது ஆசாரக்கேடு என்று கருதுகிறார்கள்; கண்டிக்கிறார்கள். குழந்தைகள் உண்ணும் பொழுது, பேசத்துடிக்கிறார்கள்; பெரியோர்கள் அடக்குகின்றனர். பேச்சுக்குப் பதில் அழுகை பிறக்கிறது. இங்ஙனம் உண்ணும்பொழுது உரையாடக் கூடாது என்ற வழக்கம் எப்பொழுது தோன்றியது? யாரிடமிருந்து வந்தது? என்று அறிந்து கொள்ளுதல் சுவையான செய்தி!

தமிழர் வாழ்வில் சமண சமயம் வந்து கலந்த பொழுதே இந்த வழக்கம் வந்திருக்கிறது. தமிழினம் சமண சமயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர்களையறியாமலே அந்த சமயப் பழக்கவழக்கங்கள் சில, அவர்களுடைய வாழ்க்கையில் வந்து பொருந்தியுள்ளன. சமணர்களின் சீரிய ஒழுக்கங்களுள் தலையாயது, நேரிடையாகவோ மறைமுகமாகவோ திட்டமிட்டோ தற்செயலாகவோ பிற உயிர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது. தற்செயலாகவும் உயிர்க்கொலை நிகழக் கூடாது என்பதற்காகச் சமண்சமயம் சில ஒழுக்க விதிகளை விதித்திருக்கிறது. அவற்றுள் ஒன்று திறந்த வாயினராக இருத்தல் கூடாது என்பது. இருந்தால், சிறு பூச்சிகள் இயற்கையில் வாய்க்குள்ளிருக்கும் பற்பசையில் சென்று ஒட்டி இறத்தல் கூடும் என்று கருதுகிறது. அதனாலேயே சமண முனிவர்கள் தம் வாயின்மீது ஒரு சிறு திரையிட்டிருப்பர்.

இவ்வளவு விழிப்பாகக் கொல்லாமையைக் கருதுபவர்கள் உண்ணும்பொழுது உரையாடினால் சிறு பூச்சிகள் வாய்க்குள் செல்லக் கூடுமென்று உரையாடுவதற்கு தடை விதித்தார்கள். அடுத்து உரையாடுதலின் மூலம் மகிழ்வு