பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

229



'என்னுடையது' 'நம்முடையது' ஆன பிறகு தனி ஒருவரின் உரிமை அழிந்துவிடவில்லை; மாறாக உறுதி பெற்றிருக்கிறது; ஆங்காரமற்றிருக்கிறது. மேலும் சொன்னால், ஒருவரைப் பாதுகாக்கப் பலர் முன் வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒருவனாகத் தனித்து, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அவலத்துடன் வாழ்க்கை முடிவதைவிடப் பலர் பாதுகாக்கும் வாழ்க்கையே புகழுடைய வாழ்க்கை. தானே உண்பதைவிட, உண்பிக்க உண்பது சுவையுடையது. தானே சிரித்து மகிழ்வதைவிடப் பிறர் மகிழ்விக்க மகிழ்வது மாண்புடையது. தானே, தன்னை வியந்ததலைவிட மற்றவர் வியந்து பாராட்டுதல் சிறப்புடையதாகும்.

ஆதலால், நேற்றைய வாழ்க்கையில் விளைந்த துன்பத்தினைப் பார்த்து அதனினும் விலகி வாழ்தல் வேண்டும். அதுபோலவே நேற்றைய வாழ்க்கையிலேற்பட்ட இன்பத்தினைப் பார்த்து அந்த இன்பத்தினை மேலும் வளர்த்துப் புதுமையாக்கி அனுபவித்தல் வேண்டும். 'நேற்று' அப்படியே அப்பட்டமாக 'இன்று' ஆகுமானால், பயனில்லை 'நேற்று' போய் 'இன்று' உருவாகும் பொழுது கழிப்பன கழித்து, கொள்வன கொண்டு புதுமைப் பொலிவு பெறவேண்டும். வறட்சித் தன்மையுடைய கிழட்டுத் தனத்தை நீக்கப் புதுமை உணர்வு துணை செய்யும். ஆக புலன்களைச் சென்ற வழியே செல்லவிடாமல், போன வழியிலேயே போய்ப் பாழாகி விடாமல், புதுநெறியில்-பொது நெறியில் நெஞ்சத்தை நாம் பழக்க வேண்டும். ஆனால், புலன்களோ புதுமையில் நாட்டமில்லாது வழக்கத்திற்கும் பழக்கத்திற்கும் அடிமையாகின்றன. “எங்களால் மாற்றிக் கொள்ள இயலவில்லையே! நாங்கள் என்ன செய்வது” என்று அங்கலாய்க்கின்றன. இந்தப் பொல்லாப் பழக்கம் பயனுடையதன்று.

நிலம், பரப்பளவில் அதிகமுடையது. ஒரு நிலம் முழுவதையும் உழுதால்தான் நிலம் பயனுடையதாகும். ஒரு