பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாறாகப் பிணம் அசைகிறது. மூச்சு விடுகிறது, என்று சிரித்துக் கேலி செய்து அவனைக் கொல்லாமல் கொல்லு கின்றனர்.

இத்தகைய ஒரு காட்சியை அப்பரடிகள் உவமிக்கின்றார். எதற்கு? உயிர், அரித்துத் தின்னும் வினையினால் அரிக்கப்பட்டு அழிந்து போதலுக்கு உவமிக்கிறார்! உயிர் ஆற்றலுடையது; அறிவுடையது; ஆள்வினையுடையது; இன்ப அன்பு நுகர்வுக்குரியது; சிறப்புடைப் புலன்களைக் கருவியாக உடையது. ஏன்? எந்தை ஈசன் இறைவனையே அன்னையாகவும் அத்தனாகவும் உறவு பூண்டது. ஆயினும் என்? வினையின் அரிப்பிலிருந்துது அது மீள முடிவதில்லை. தனது தகுதிப் பாட்டினை இழந்து, வஞ்சப் புலன்களின் வஞ்சனைகளுக்கு இரையாகி மயங்கிக் கிடக்கிறது. அறிவு தொழிற் படவில்லை; ஆன்ற ஆள்வினையும் தொழிற்படவில்லை. துன்ப இன்பச் சுவை வேறுபாடுகளை உள்ளவாறு சுவைத்துத் தீயதை விலக்குதலுக்கும், நல்லது மேற்கொள்ளுதலுக்குமுரிய செயற்பாடில்லை. இந்தத் தளர்ச்சி பொருந்திய-முறை பிறழ்ந்த நிலையினால், வினை மேலும் மேலும் அடர்த்துத் தாக்கி உயிரை வலுவிழக்கச் செய்கிறது. நல்லுணர்விலிருந்து விலக்கித் தனிமைப்படுத்துகிறது. அதன் மூலம் வாழ்வுக்கும் புகழுக்கும் உரிய உயிரை அரித்து அரித்து அணு அணுவாக அழிக்கின்றது.

இங்ஙனம் வினைகளால் அரிப்புண்டு, அணு அணுவாக அழிதலைவிடச் சாவது மேல். ஆயினும், எலும்பு கடித்துத் தின்னும் நாய்க்குத் தன் வாயிலிருந்து செங்குருதி கொட்டினாலும் எலும்பு துண்டின் வேட்கை அதற்கு மாறாததைப் போல, மனிதன் எவ்வளவுதான் வினை வழிப்பட்ட துன்பத்தை அனுபவித்தாலும் அவனுக்கு வினையிலிருந்து முற்றாக விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கை இல்லை. சுடுகாட்டில் பிணத்தன்மை தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரே வழி, அவன் திருச்சிற்றம்பலத்தை நாடி அடைதலாகும். திருவருள் தன்மையுடைய அறிவு