பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது வேறு. அஃது உலகந்தழீஇயது. இந்தப் படிமுறை வளர்ச்சியில் ஒர் ஆன்மா வளர்தலை வாழ்வியலாக வளர்தலை-இயக்கமாகி வளர்தலை அப்பரடிகள் அழகுற விளக்குகின்றார்.

வாழ்வியல் பயணம் முடியவில்லை; தொடர்கிறது. தொடர்கிறது என்று கூறுவது தவறு. உயிர், தன்னை உற்று நோக்குகிறது. இல்லை, உற்று நோக்க ஆன்மாவை ஆற்றுப்படுத்துகிறது. சிவம்-கடவுள்! ஆம்! உற்று நோக்கியதன் பயன்? ஆன்மா மெள்ளத் தற்சார்பு நிலை அடைந்து வந்துள்ளது. ஆற்றலில் தற்சார்பு வரவேற்கத் தக்கது. ஆனால் வாழ்நிலையில் தன்னலம் வளர்ந்து விடக்கூடாது. ஐயனிடமிருந்து அன்பு தடம் புரள்கிறது. வீட்டின் இடையில் சுவர் தலைகாட்டுகிறது. காதல் மனைவி வேலைக்காரியாகிறாள்! அந்நியமாகிறாள்! அவள், தனக்குரிய கடமைகளைச் செய்யும் இயந்திரம்! அவளுக்கு இவன் செய்ய வேண்டிய கடமைகள் இல்லை என்ற நிலை! இந்த நிலை, முறை திறம்பிய வாழ்நிலை! துய்க்கும் நெறியில் துறவு சார்ந்தாலே துய்த்தல் சிறப்பாக அமையும். துறவும், துய்த்தலும் இரட்டை நாடிகள். “பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு” என்பதறிக. இது துறவும் துய்த்தலும் ஒருங்கிணைந்த வாழ்வு நிலை. அப்போதுதான் அன்பு வளரும், அறம் வளரும், துறவு வாழ்க்கை தனி வாழ்க்கையல்ல. துறவும் துய்த்தலும் கலந்ததே நிறை நலம் சான்ற வாழ்க்கை! அப்போதுதான் உழைப்பு உணவாகிறது. கூடி உணவு உண்ணும் சுற்றம் சார்ந்த வாழ்வு மலர்கிறது. உழைப்பின் பயன் உலகை உண்பிக்கப் பயன்படுகிறது. இதுவே அறம் சார்ந்த எருதுவின் வாழ்க்கை முறை! எருது மீது எம்பெருமான்! உழைத்துப் பலபொருள் படைத்து அளித்து வாழ்வித்து வாழ்தல் எருதுவின் வாழ்க்கை! இத்தகையோர் இதயத்தில்தான் எம்பெருமான் எழுந்தருள்கின்றான்! இதயத்தை உறைவிடமாகக் கொள்கின்றான்; ஊர்தியாகக்