பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

257


தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

(ஆறாம் திருமுறை. 961)

என்று முடியாட்சியை எதிர்த்துப் புரட்சி செய்த தலைவர் அப்பரடிகள். அப்பரடிகள் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு.

ஆனால், அன்று (ஏழாம் நூற்றாண்டில்) அப்பரடிகள் எண்ணிச் சொன்னவைகள், இன்று சீர்த்திருத்தக் கருத்துக்களாகப் போற்றப்படுகின்றன. தமிழுலகில் முதன் முதலில் சமுதாயச் சீர்திருத்தத்தைச் சிந்தித்துக் கூறிய முதல் புரட்சித் தலைவர், ஞானத் தலைவர் அப்பரடிகள்.

சமுதாயச் சீர்த்திருத்தம்

தமிழ் மரபில் குலம் மட்டும் உண்டு. குலம் என்பது வழி வழி தலைமுறை சார்ந்த நெறி மரபினைச் சார்ந்தது. இதனை,

இலமென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள- திருக்குறள் 223

என்ற திருக்குறளாலும் அறிக. பிறப்பினால் அமையும் சாதிக் கொடுமைகள் தமிழகத்தில் இருந்ததில்லை. அயல் வழக்கின் நுழைவாலும் நிலபிரபுத்துவ சமுதாய அமைப்பின் காரணமாகவும் பிறப்பினால் சாதி வேற்றுமை, தீண்டாமை முதலியன வந்து புகுந்தன. இந்தச் சாதி வேற்றுமைகளை அப்பரடிகள் வன்மையாக மறுகின்றார்; கண்டிக்கின்றார்.

சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமுங்குல மும்கொண் டென்செய்வீர்

கு.இ.VII.17.