பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இளைஞர்களும், பெரியவர்களும் தேவர் மன்றத்தில் நிரம்பி வழிந்தனர். உயிருருக்கும் பாட்டினைத் தந்த மாணிக்க வாசகரின் திருவுருவம் அரங்கில் காட்சியளித்தது. திருவாசகப் பாடல்கள் பாடப்பெற்றன. இதற்கிடையில் அவையில் கையொலி - ஆரவாரம். அவையிலிருந்தோர் மன்றத்தின் நுழைவாயில் நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். கட்டான உடல், முறுக்கேறாத மீசை கையில் ஒர் ஏடு. ஆகியவற்றோடு ஜீவா உள்நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவரை அந்த விழா அரங்கில் பார்த்ததில் பலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிலும் கலந்து பழகும் பண்பை நினைவுறுத்தும் நற்காட்சி என்று ஒருமைப்பாட்டுணர்வுடையோர் பேசிக்கொண்டார்கள். அதிபக்திமான்களுக்கு அச்சம். நாத்திகர் திருவாசக விழாவில் பேசுவதா என்ற கேள்வி-குமுறல், அமரர் ஜீவா அவர்கள் அரங்கில் வந்தமர்ந்தார். தவத்திரு அடிகளார் இன்ப அன்பு தழுவ வரவேற்றார். அமரர் ஜீவா அவர்கள் பேசத் தொடங்கினார். திருவாசக விழாவில் திருவாசகம்பற்றி அமரர் ஜீவா பேசினார். என்ன அற்புதம்! மணிவாசக பக்தர்களும்கூட இவ்வளவு பெரிய பக்தியை மாணிக்க வாசகருக்குக் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். மிக அழகாக மரபு பிறழாமல் பேசினார். ஆனாலும் பார்வை தமது சொந்தப் பார்வையே! இல்லை. அப்படிச் சொல்வது சுத்தப் பொய்! நியாயமாகப் பார்த்தால் மாணிக்கவாசகர் பார்வைக்கும் அமரர் ஜீவா பார்வைக்கும் வேற்றுமையே இல்லை. இதுவே உண்மை. அன்று அவர் எடுத்துக்கொண்ட பாடல் “வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்” என்ற பாடல். இந்தப் பாடலின் பொருள்நலம் அமரர் ஜீவாவின் சொல்லாற்றலால் புதுநலம் பெற்றது. பொது நலமும் பெற்றது. “இறைவனே மனிதரை ஆட்கொள்ளுவதற்காக-ஞானியரை ஆட்கொள்ளுவதற்காக அல்ல-அர்ச்சகர்களை ஆட்கொள்ளுவதற்காக அல்ல-நிலப்