பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாவுக்கரசர்

321


உடலியக்கத்திற்குத் தீங்கு பயப்பினும் உணவை விரும்பி உண்பது ஆசையாகும்.

பொருள், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருளின்றேல் பூவுலகம் இல்லை. நெறிமுறைப்பட்ட துய்ப்பிற்கும், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் மற்றவர் உயிர் வாழும்படிச் செய்யும் அறமாகிய ஈதலுக்கும், பொருள் தேவை. இந்த வகையில் பொருளை விரும்புதல் ஆசையன்று. அங்ஙனமின்றிப் பொருள் மீதே விருப்பங்காட்டிப் “பொருளுடையோன்” என்று பலரும் சொல்ல விரும்பித், துய்க்காமலும் ஈந்து மகிழாமலும், மகிழ்விக்காமலும் பொருளொன்றையே குறியாகக் கொண்டு சேமிப்பது, ஆசையாகும்.

மண்ணில் பயிர் தழைக்க மழைத்துணை தேவை. அதுபோல மனிதகுலம் செழிக்க அன்பு தேவை. உயிர், காதலால் செழித்து வளரும். காதல் பாலுணர்வின் பாற்பட்டது மட்டுமன்று; அதனையும் கடந்தது. காதல் உயிர்களைச் செழிக்கச் செய்யும்; உணர்வுகளைச் செழிக்கச் செய்யும்; தூண்டி வளர்க்கும்; தூய்மை சேர்க்கும்; பொறிகளுக்கும் புலன்களுக்கும் அன்பினைச் சேர்க்கும். இத்தகு தூயகாதல்வழி ஒருவன் ஒருத்தியை நாடுதலும், ஒருத்தி ஒருவனை நாடுதலும் ஆசையாகா. பயனின்றி உயிர்களை அரித்தழித்து உருக்குலைக்கும், பாலுணர்ச்சியின் வெறியில் மகளிரை நாடுதல் ஆசையாகும். உயிருக்குக் கடவுள் துணை. அவன் தாயிற் சிறந்த தயவுடன் தண்ணளி சுரக்கும் துணை. கடவுளை வாழ்த்துதல் வாழ்வேயாகும். கடவுளை மாறா அன்பினில் வாழ்த்துதல் வேண்டும்.

அங்ஙனமின்றி, “இது வேண்டும், அது வேண்டும்” என்ற விண்ணப்பங்களுடன், விண்ணப்பத்தை நிறை வேற்றுவதற்காகக் கடவுள் மீது விருப்பமின்றி, விருப்பங்கள் மீது விருப்பத்துடன், கடவுளை வாழ்த்துதல் ஆசையாகும். ஆசை துன்பத்தையே தரும். ஆசையுணர்வில் சுவை புதிதல்ல;

கு.இ.VII.21