பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3
உயிருக்குரிய உணவு !

ஊண் உண்ணப்படுவது. உண்பது ஒரு சடங்கல்ல. அஃதொரு கடமையல்ல; அஃதொரு பணி. பயன் கருதிச் செய்ய வேண்டிய பணி. பயன் அடையத்தக்க வகையில் செய்ய வேண்டிய பணி. ஊண் பலவகை. வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஊண் தேவை. இன்று உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவையே உணவு என்று பலர் கருதுகிறார்கள். மற்றைய உணவுகளைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஏன்? உணவையுங்கூடப் பலர், உடலியக்கத்திற்கு என்று கருதி உண்பதில்லை. சுவைத்து உண்பது நன்று. ஆனாலும் சுவைக்காக உண்ணக்கூடாது. உடல் இயக்கத்திற்கும், பணிக்கும் தேவைப்படும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு உணவு முறை அமையவேண்டும். உண்ணும் உணவு, உடலுக்கு வலிமையே. அஃது இயங்கும் ஆற்றலை வழங்குவதாக இருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்காகவே உண்கின்றோம். உண்பதற்காக அல்ல. உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவைப்போலவே அறிவியக்கத்திற்கு உண்ணவேண்டிய உணவு உண்டு. அதனை வள்ளுவம், ‘செவியுணவு’ என்று கூறும். வாய் உணவிற் சுவைகாண்பது போலவே செவியாலும் சுவை