பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யுடைய தலைவனை உணர்தல். இதனைத் ’தம்மையும் நோக்கிக் கண்டு’ என்றார்.

இவ்வளவும் நிகழ்ந்த பிறகு, அயர்ந்தும் சிறு நெறி செல்லாமல் பெரு நெறியைப் பற்றி ஒழுகுதலும் எங்கும் எப்பொழுதும் யார் மாட்டும் உள்ளும் புறமும் ஒத்துப் பழகுதலும், உயிர் ஒருமைப்பாடு காணல் என்ற தகைமை நெறி நிற்றலும் ஞான வாழ்க்கைக்கு வேலி. ஞான உறவில் வாழ்க்கை முழுமையாக ஈடுபட்டு வெற்றி கண்டவரே பிறகு, இரக்கத்தின் திருவுருவமாக விளங்குவர். ’ஐயன் ஐயாற னார்க்கு அன்பலால் பொருளில்லை’ என்பது அடிகள் வாக்கு அன்பே சிவமாய் அமைந்து வாழ்வதே செம்மையுள் நிற்றல். இந்த வாழ்க்கையின் பயனாகச் சிவகதி விளையும்.

அப்பரடிகள் பிறப்பை வெறுத்தவர் அல்லர். மண்ணை வெறுத்தவரல்லர். ஆனால் இவைகளை நம்பி வழியிடை நின்றவருமல்லர், தூய மனிதப் பிறவியும் வேண்டுமென்று வேண்டுகின்றார். அப்பரடிகள் கயிலைக்குச் செல்லக் காமுற்றார். ஆனால் எந்தை சிவபெருமானோ அப்பரடிகளின் இடத்திற்கே கயிலையை மாற்றினார். ஏன்? அப்பரடிகளின் அருந்தமிழை ஞாலத்தில் பயில வேண்டும்; அப்பரடிகளின் திருத்தொண்டின் நெறி வையகத்தில் நீடு நிலவ வேண்டும்! அதனாலன்றோ அரன் நாமத்தை எண்ணாது அப்பரடிகளின் நாமத்தையே எண்ணிய அப்பூதியடிகள் வாழ்த்தப்படுகிறார். அப்பரடிகள் தமிழாசிரியர்; தமிழ்த் தலைவர்; அன்பின் ஆக்கம்; அருளின் திருவுருவம்; பத்திமையின் வடிவம்; திருத்தொண்டின் திருவுரு; நம்மனோர்க்கும் ஞானத்தை வழங்கிய ஞானாசிரியர். அப்பரடிகள் நெறி வையகத்தில் கால்கொள்ளுமானால் சாதி வேற்றுமைகள் சருகெனக் காயும்; சமநிலைச் சமுதாயம் தோன்றும்; எல்லோரும் வாழ்வர்; இன்புற்று வாழ்வர்; இம்மண்ணகம் விண்ணகமாகும். அப்பரடிகளின் திருவடிகள் வாழ்க! வாழ்க!