பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



32
சமய இலக்கியங்கள்

தமிழ், காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்து முதிர்ந்து வளர்ந்த மொழி. இலக்கியம் - இலக்கணம் - இலக்கியம் என்று சுழற்சி முறையில் செழித்து வளர்ந்த மொழி. தமிழின் செழிப்புக்கு அதன் இனிமையும், தமிழிலக்கியங்கள் காட்டும் நெறிமுறைகளும் எடுத்துக்காட்டுக்கள்.


தமிழில் விளங்கும் தொன்மையான நூல் தொல் காப்பியம். இந்நூல் 2700 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தென்பர் மொழி வரலாற்றறிஞர். தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல். இலக்கியங்களின் வழிதான் இலக்கணங்கள் தோன்றுகின்றன. அங்ஙனமாயின் தமிழிலக்கிய உலகம் 2700 ஆண்டுகளுக்கு முந்திய பழமையுடையது. தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் ஒன்றென அழைக்கப்பெற்றாலும் அஃது அப்பட்டமான மொழி இலக்கண நூல் மட்டுமன்று. வாழ்க்கையின் இலக்கணம் கூறும் வாழ்வியல் நூலுமாகும். எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே, இலக்கணம் கண்டன. ஆனால், தொல்காப்பியம் அம் மொழியைப் பேசி வாழும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற உணர்வு அரும்பும் தொடக்கமே சமய