பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொன்பெற்றமை

இறைவன் திருப்புகலூரில் செங்கல்லைப் பொன்னாக்கித் தர, பொன் பெறுகிறார், தம்பிரான் தோழர். பின், சில நாட்களிலேயே திருப்பாச்சிலாச்சிராமத்திலேயும் பொன் வேண்டுகிறார். திருப்பாச்சிலாச்சிராமத்துறையும் தலைவன் இப்போது பொன் தரவில்லை. உடன் தம்பிரான் தோழருக்கு முறைப்பாடு வந்துவிடுகிறது.

வைத்தனன் தனக்கே தலையும் என்நாவும்
நெஞ்சமும் வஞ்சம்ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை
உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
வைத்த பாம்புஆர்த்தோர் கோவணத்தோடு
பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர் நச்சில ராகில்
இவரலாது இல்லையோ பிரானார்,

(7.14–1)

என்று பாடுகிறார். இந்தப் பதிகத்தில் “இவரலா தில்லையோ பிரானார்” என்று பாடுவதால் இறைவன் பால் உண்மையில் முறைப்பாடா? சிவபெருமான் தலைமையிலிருந்து விடுதலை பெற்று வேறு கடவுள் தேடுகிறாரா? அப்படியெல்லாம் நினைக்கத் தம்பிரான் தோழர் வரலாறு இடம் தராது.

சிவபெருமானிடம் உறைப்புள்ள அடிமை பூண்டவர் தம்பிரான் தோழர். இங்ஙனம் பாடுவதெல்லாம் உரிமையும் உறவும் மேவினமையின் விளைவு! இந்தப் பதிகத்தின் திருக்கடைக் காப்புப் பாடலில்,

ஏசின வல்ல இகழ்ந்தன அல்ல
எம்பெரு மான்என்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்து
அடிகளை அடிதொழப் பன்னாள்