பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்களை இழந்ததும் பெற்றதும்

இளவேனில் பருவம் வருகிறது. அப்போது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழா நினைவுக்கு வருகிறது. வசந்த விழாவைக் காணும் அன்பு மேலிடுகிறது. “எழிலாரூர்ப் பெருமானே! ஆரூர் அரசே! நின்னை யான் எங்ஙனம் பிரிந்திருப்பேன்?” என்று எண்ணி அழுகிறார்; புலம்புகின்றார்; ஆரூரை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்.

திருஒற்றியூர் எல்லையைக் கடக்கிறார்; கடந்த அளவில் அவர் கண்கள் இரண்டையும் இழக்கிறார்; மூர்ச்சையாகிறார், சபதம் பிழைத்தமையால்! நம்பியாரூரருக்கு வேறு ஏது பற்றுக்கோடு? இறைவனிடத்தில் கண்களைத் தரவேண்டிப் பாடுகிறார்.

அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி விழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக்கு ஒருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊர்உறை வானே,

(7.54.1)

என்று கசிந்துருகின்றார். கண் கிடைக்கவில்லை. மீண்டும் அழுது அரற்றிக் கைக்கோலாவது தருக என வேண்டுகிறார். இதனை,

மூன்று கண்ணுடை யாய் அடியேன் கண்
கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்றுகோ லெனக் காவது ஒன்றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே!

(7.54.4)