பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர்

371


என்பதால் அறியலாம். “இறைவா! உனக்கோ மூன்று கண்! எனக்கிருந்த இரண்டு கண்ணையும் பிடுங்கிக் கொண்டாய்! இங்ஙனம் என் இரண்டு கண்ணையும் பிடுங்கிக் கொண்டதன் மூலமாவது கணக்கு வழக்கைத் தீர்த்துக் கொண்டாயா? அல்லது தொடருமா?” என்னும் பொருள் படக் “கணக்கு வழக்கும்” பேசுகிறார்.

சபதம் பிழைத்ததற்குக் கண்களைப் பறிப்பதுதான் தண்டனையா? வேறு தண்டனை கொடுத்திருக்கக் கூடாதா? சத்தியம் செய்தது வாய்தானே! ஏன் ஊமையாக்கி இருக்கக்கூடாது? என்ற கேள்வி எழலாம்.

திருமுறைத் தமிழில் உள்ள விருப்பத்தால் பெருமான் ஊமையாக்கவில்லை. நம்பியாரூரர் தம் கண் இழந்த பிறகு பாடும் பதிகங்கள் அற்புதமானவை; நெஞ்சு நெகிழத்தக்கவை. தாம் விரும்பிக் கேட்கும் நம்பியாரூரரின் நற்றமிழ்ப் பாடல்களை அனுபவிக்க இயலாதே என்று ஊமையாக்கவில்லை.

நம்பியாரூரரின் கண்கள் காதலுக்குத் துணை நின்றதாலும் நாடு காண ஆசை அவருக்கு ஏற்பட்டதால் சபதம் பிழைத்ததாலும் கண்களைக் குருடாக்கினார் என்றும் அமைதிகொள்ளலாம். இந்த இடையீடு தம்மீது காதலை மேலும் தூண்டும் என்றும் பெருமான் எண்ணியிருக்கலாம்.

திருஒற்றியூர் இறைவன், நம்பியாரூரரின் துன்பம் கண்டு இரங்கவில்லை. நம்பியாரூரர் தொண்டர்கள் வழி காட்டத் திருமுல்லைவாயிலை அடைகிறார். திருமுல்லை வாயில் திருப்பதிகத்தில் “சங்கிலிக்கா என் கண் கொண்டனை பண்ப” என்று பாடுகிறார். “பண்ப” என்ற சொல் சங்கிலிக்கு நல்ல விதமாக நடந்து கொள்வதற்காக என் கண்களைப் பறித்தாயோ என்னும் பொருள் படக் கூறியதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

பின் திருவெண்பாக்கம் திருக்கோயிலையடைந்து இறைவனை வணங்கிப் “பிழைகளைப் பொறுப்பதே பெரி-