பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


1. உவமைகள்

சுந்தரர் தேவாரத்தில் நிறைய உவமைகள் உண்டு. ஒன்றிரண்டு உவமைகளைப் பார்க்கலாம். ஆடு கறப்பவர்கள், ஆடு கறக்கும்பொழுது பால் கறக்கும் பாத்திரத்தில் பிழுக்கை விழுந்துவிடும். பால் கறப்பவர்கள் பிழுக்கைகள் விழுந்த பால் என்று பயன்படுத்தாமல் கீழே ஊற்றிவிட மாட்டார்கள். பிழுக்கைகளை வாரிப் போட்டு விட்டுப் பாலை வீணாக்காமல் உபயோகப்படுத்துவார்கள்.

இறைவா! திருஒற்றியூர் உறையும் இறைவா! நான் உன் திருமுன்புக்கு அழுக்கு நிறைந்த உடம்போடு வந்தது உண்மை. ஆனால் நான் என்ன பிழுக்கை விழுந்த பாலைவிட மட்டமா? நான் பிழை செய்வேன்! என் சொந்த வாழ்க்கையில் பிழை செய்வேன்!

ஆயினும் இறைவா! நின் திருவடிக்கு யாதொரு தவறும் செய்யேன்! நின்னாமம் மறவேன்! ஏன் வழுக்கியே வீழட்டுமா? நான் வழுக்கியதால்தானே சபதம் செய்து கொடுத்தேன்!

ஆயினும் நின் திருப்பெயர் மறந்தேனா? இல்லை. இல்லை! என்னை ஆட்கொண்டு கண்ணுக்கு மருந்து கொடு என்றார். “பிழுக்கை வாரியும் பால் கொள்வர்” என்பது நல்ல உவமை.

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்றுநான் அறியேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றியூர்எனும் ஊர்உறை வானே!

(7.54.1)