பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16
உண்மைத் தொண்டர்

உயிர், ஒரு வளமார்ந்த விளைநிலம். அறிவார்ந்த விளை நிலம், ஓயாது தொழிற்படும் தன்மையது. விதை விதைக்காமலே உணர்வுகளை மையமாகக் கொண்டு வினைகளை விளைவிக்கும் தன்மையது. அலை கடலில், அலை வரிசை ஒன்றின் பின் ஒன்றாய் வீசுதலைப் போல அவா, அலைகள் வீசும் தன்மையது. ஒன்றை நினைக்கும், அதை அழித்துப் பிறிதொன்றை நினைக்கும். ஓயாத போராட்டம். ‘அவா வெள்ளம்’ என்று மணிமொழி பேசும். பிறப்பைத் தரத்தக்க ஆற்றல் அவாக்களுக்கே உண்டு. செயலுக்குக் களம் அவா. அவாவுக்குத் தாய் ஆசை. ஆசை அவாவைத் தூண்ட அவா செயலைத் துண்ட இன்பம்-துன்பம், வசை-வாழ்த்து, காய்தல்-உவத்தல், பகை-நட்பு ஆகிய சுழிகளில் உயிர் கிடந்து அலமருகின்றது. அலைகடலும்கூட நள்ளிரவில் உறங்கும் என்பர். அவா வெள்ளத்தால் அலைக்கப்பெறும் உயிர், பேய் படுத்துறங்கும் இரவிலும் உறங்குவதில்லை. மகிழ்ச்சி மேலிட்டிருந்தால் கற்பனை. ஆழ்துயில் கிடைக்காமலிருந்தால் கனவு. மனம், பகைப்புயலில் சிக்கித் தவித்தால் குள்ளநரித்தனச் சதித் திட்டங்கள். இங்ஙனம், சொறியச் சொறிய அரிப்