பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

89


தவமின்மையின் காரணமாக அங்ஙனம் உணரவில்லை. நடைமுறை வேறுவிதமாக அமைந்துவிட்டது:

அமைச்சியல் வாழ்க்கையில் இருந்த மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைக்குக் குதிரை வாங்கப் போன நாள் முதல் அவர்தம் வாழ்க்கையில் அற்புதமான மாற்றம் ஏற்பட்டது; தவமே மேலிட்டது. ஊராரை மறந்தார்; உற்றாரை மறந்தார்; இறைப்பணியில் நின்றார். திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டான்! ஆம்! இதுவே சிவபெருமான் வழக்கம். சிவபெருமானுக்கு எப்போதும் அடியார்களுக்குப் பஞ்சம்! அதனால் தேடிவந்து தகுதியானவர்களை அழைத்துக் கொள்வான். மாணிக்கவாசகரை, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஞானாசிரியனாக வந்தருளி ஐந்தெழுத்தருளி ஆட்கொண்டருளினன். இதனை,

“நானேயோ தவம் செய்தேன்;
சிவாயநம எனப் பெற்றேன்”

என்று வியந்து கூறுகின்றார். மாணிக்கவாசகருடைய தவம் ஐந்தெழுத்தைத் தரவில்லை; சிவபெருமானுடைய கருணையே தந்தது என்பது கருத்து.

ஓர் ஆன்மா அதன் தகுதியைத் தானே வியந்து கூறுதல் ஆணவத்தின் பாற்படும். அவ்வழி, தகுதியின்மையேமேவும். சிவநெறி ஒழுக்கத்திற்குரிய தகுதிப்பாடுகளுள் ஒன்று “தாழ் வெனும் தன்மை”. அதாவது, அடக்கம், நிலத்தினைக் கிண்டிக் கொண்டு விண்நோக்கி வளரும் மரம் நிலத்தடியிலும் வேர்பாவும். நிலத்தடியில் பாவும் வேரின் வலிமையில்தான் மரத்தின் வலிவு இருக்கிறது. அதுபோல ஆன்மாக்களின் வளர்ச்சி-நிலைப்பாடு ஆரவாரத்தில் இல்லை; அடக்கத்தில் தான் இருக்கிறது. தாழ்ந்து பழகும் இயல்பில்தான் வளர்ச்சியின் அமைவு இருக்கிறது.

கு.இ.VIII.7.