பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
VIII


தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்நாடு செய்த தவப்பயனால் 1925இல் தோன்றி 70 ஆண்டு காலம் தமிழகத்திற்குப் பல்வேறு பணிகள் வாயிலாகக் கடமை ஆற்றிய நாட்டுத் துறவியாவார்.

தவத்திரு அடிகளாரைப் புரட்சித்துறவி என்றும், மிகச்சிறந்த சொற்பொழிவாளர் என்றும் நாடு கருதும்.

அடிகளார் எழுத்துக்கள் அனைத்தையும் நூல்வரிசையாகத் தொகுக்கும் போது ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களுக்குக் குறையாமல் 15 தொகுதிகளாக மொத்தம் சற்றொப்ப 6000 பக்கங்கள் அளவில் விரிந்தன. தம் 50 ஆண்டுப் பொதுவாழ்வில் அடிகளார் எழுதிய 60 நூல்களையும் பதிப்பாசிரியர் குழு 5 தலைப்புக்களில் வகைப்படுத்தியது. நூற்றொகுதி அனைத்தையும் ஒருசேர வைத்து நோக்கும்போது அடிகளார் மிகச்சிறந்த நூலாசிரியராகச் சிறப்பதை நாம் உணர்கிறோம்.

1999 டிசம்பர் திங்களில் முதல் தொகுதி முகிழ்த்தது. 2001 நவம்பரில் தொகுதிகளின் அச்சுப் பணி முடிந்தது. திருக்குறள் பற்றி மட்டும் அடிகளார் கட்டுரைகள் 4 தொகுதிகளாகச் சற்றொப்ப 1600 பக்க அளவில் விரிந்துள்ளது.

தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகள் ஆகியோர் அளித்துள்ள அணிந்துரைகளில் அடிகளாரின் இறையுணர்வையும், பக்திவழி நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பையும், சைவத்திற்கும். தமிழுக்கும் அடிகள் ஆற்றிய அளவிடற்கரிய பணிகளையும் போற்றியுள்ளனர்.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த திறனாய்வாளர்களான சிலம்பொலி செல்லப்பர், வா.செ. குழந்தைசாமி, தமிழண்ணல், வை. இரத்தினசபாபதி, ஒளவை நடராஜன், சிற்பி பாலசுப்பிரமணியன், ச.வே. சுப்பிரமணியம், கு. சுந்தரமூர்த்தி முதலியோர் அடிகளார் நூல்வரிசையை ஆராய்ந்து, தேர்ந்து, தெளிந்து அடிகளாரின் சிந்தனை வளத்தையும், சமூக உணர்வினையும், பல்துறை அறிவினையும், மனித நேயத்தையும், தமிழாற்றலையும், அழுத்தமாக எடுத்துக் கூறும் பெற்றியினையும் தங்கள் அணிந்துரைகளில் சான்றுகளுடன் விளக்கி உள்ளனர்.

பொதுவாக 15 தொகுதிகளிலும் அடிகளாரின் ஆளுமை வெளிப்பட்டாலும், மூல இழையாகச் செல்வது தமிழ்ச் சமூகத்திற்குரிய விழுமங்கள். உன்னதங்கள், உயர்வுகள், சிறப்புக்களே. பழந்தமிழ் இலக்கியமாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் தொடங்கி பாரதி பாடல்வரை தமிழரின் தனி அடையாளங்களின் வேர்களை அவை இனங்காட்டுவன.அயல் வழக்கினைத் தமிழ் வழக்கு வென்ற திறத்தினை அடிகளார் அழுத்தம் திருத்தமாக ஆவணமாக்கிவிடுவார்.