பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயலும். உலகியலில் வழிகாட்டுவோர் பலர் இருந்தனர். இன்றும் பலர் உள்ளனர். ஆனால் பயன் என்ன? பொறுப் புணர்வுடனும் தயாவுடனும் எடுத்து வளர்ப்பதற்கு - ஆளாக்குவதற்கு முன்வருவோர் எவர்? உபதேசிப்போர் பலர் உள்ளனர். இடுக்கண் வருங்கால் காப்பாற்றுவோர் யார்? காப்பாற்றுவோர் தானே வேண்டும்! உபதேசத்தின் வழி உலகம் சென்றுவிடாது எடுத்தாண்டு இட்டுச் செல்வார் பின் உலகம் செல்லும்; உய்யும், காப்பாற்றுவோர் பின்னே வந்தால் தான் விழுந்தவுடன் தூக்கலாம்; எடுக்கலாம்.

திருப்பெருந்துறையுறை சிவன், மாணிக்கவாசகரை ஆட்கொண்டருளினன். அந்தம் ஒன்றில்லா இன்பத்தை வழங்கியருளினன். இந்த இன்பத்தை மாணிக்கவாசகர் இடையீடின்றி அனுபவிக்க, திருப்பெருந்துறையுறை சிவன் மாணிக்கவாசகரைப் பின் தொடர்கிறான்; திருஆலவாய் வரையில் பின் தொடர்கிறான்; மாணிக்கவாசகருக்காகக் குதிரைச் சேவகன் ஆகிறான். கொற்றாளாகி மண் சுமந்து பிரம்படி படுகிறான். எல்லாம் மாணிக்கவாசகரைக் காப்பாற்றத்தானே! காத்தாள்பவருக்குக் காத்தல் கடமை தானே! கடமை வாழ்வு எளிதன்று! காத்தாளும் கடமை எளிதன்று என்பதற்கு மாணிக்கவாசகர் வரலாற்றில் சிவ பெருமானுக்குற்ற அனுபவங்களே சான்று.

நமது திருக்கோயில் திருவிழாக்களில் சுவாமியின் முன்னே நாம் போவோம்! சுவாமி பின்னே வருவார்! “போ, முன்னே போ! முன்னேறிப் போ! நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அறிவித்தல்தானே இது! ஏன்? நமது உலகியலில் கூட அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்கு வரும் காவலர்கள், அமைச்சர்களுக்குப் பின்னேதான் வருவார்கள்! காவல் செய்வோர், காத்து வருவர் பின்னே!

இறைவன் தாய்! நினைந்தூட்டும் தாயிலும் நனி நல்லன்! ஊனை இளைக்க வைத்து, உயிரை ஒளியூட்டி வளர்க்கிறான்! ஆனந்தமாய இன்பத்தைப் பொழிந்து