பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்தமில்லா இன்ப அனுபவத்தை, திருவாசகப் பாடல்களாகத் தந்தார். திருவாசகம் பாடல்கள் மட்டும் அல்ல; திருவருளனுபவம்! இறைவனின் திருவருளுக்கு மொழியால் வடிவம் தந்தவர் மாணிக்கவாசகர். இந்தப் பண் சுமந்த பாடல்களைப் பரிசாகப் பெற்றான் இறைவன். திருவாசகப் பாடல்களை அனுபவிக்கும் ஆரா வேட்கையில் தாமே அதனை எழுதிப் படியும் எடுத்து வைத்துக் கொண்டனன். இதனைச் சிவப்பிரகாசர் “கைகளோ முறிபடும் கைகள்” ஆயினும் திருவாசகத்தைப் படியெடுத்தான் என்பதனை,

கைகளோ முறிபடுங் கைகள் காணின்
கண்களோ ஒன்று காலையில் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்
ஆயினும் தன்னை நீ புகழ்ந் துரைத்த
பழுதில் செய்யுள் எழுதினன்

என்று கூறி விளக்குகின்றார். மாணிக்கவாசகர் காலத்துக்குப் பிறகு, இறைவன் தம்மை வழிபடுதலினும் திருவாசகத்தினைப் பூசை செய்தல், ஓதுதல் முதலிய செயற்பாடுகளாலேயே தம்மை அடையமுடியும் என்ற நியதியை வகுத்தருளினன். ஒவ்வொரு ஆன்மாவையும் ஆட்கொள்ள எத்தனை தடவை மண் சுமப்பது? பிரம்படி படுவது? இந்தத் துன்பத்திலிருந்து திருப்பெருந்துறையுறை சிவன் தப்பித்துக் கொண்டனன். திருவாசகம் ஓதினாலேயே திருப்பெருந்துறையுறை சிவன் அருள் கிடைக்கும். ஆட்கொள்ளப் பெறுவர்; இது நியதியாகவே யாயிற்று. இது திருப்பெருந்துறையுறை சிவனுக்கு மாணிக்கவாசகரிடமிருந்து கிடைத்த பாதுகாப்பு. மக்களுக்கும் எளிய வழியில் இறைவனை அட்ைய முடிந்தது. அதுமட்டுமா? கடையூழிக் காலத்தில் இறைவனின் தனிமைத் துன்பத்தை மாற்றிக் கொள்வதற்காக-படிக்க மாணிக்கவாசகர் திருவாசகத்தைத் தந்தார். “கடையூழி வருந்தனிமை