பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன் ஓர் கைம் மாறே

(கோயில் திருப்பதிகம்-10)
சிவபதம் அளித்த செல்வம்!

மானிட வாழ்வு, காலத்தினால் இயக்கப்படுவது. காலம் என்ற நியதி மானிட வாழ்வுக்கு இயற்கையாய் அமைந்தது; தவிர்க்க முடியாததும் கூட! மாணிக்கவாசகர், வாழ்க்கையின் போக்கைப் ‘பொய்யினைப் பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி’ என்று குறிப்பிடுகின்றார். ஆன்ம வாழ்க்கையின் அருமைப்பாட்டை அறியும் அறிவும் அதனை உரிய காலத்தில் உரியவாறு பயன்படுத்துவது பற்றிய அறிவும் நமக்கு வரவேண்டுமானால் நாள்தோறும் கிழிக்கும் நாட்காட்டியை (calendar) வைத்துக்கொள்வது நல்லது. இந்த நாட்காட்டி ஜனவரி முதல் தேதி கனமாக, புதியதாக, பொலிவாக விளங்கும். நாள் ஆக, ஆக இளைத்து டிசம்பர் 31ம் தேதி முற்றாக இதழ்கள் இல்லாமல் போய் வெறும் அட்டையே மிஞ்சியிருக்கும். எடை குறைந்து விட்டது; அழகு போய்விட்டது. அது போலத்தான் மனிதன் குழந்தையாகப் பிறக்கின்றான்; சிறுவனாக ஓடி விளையாடுகிறான்; இளைஞனாகிறான்; முதியவன் ஆகிறான்; கிழவன் ஆகிறான்; கடைசியில் மூளையின் இயக்கம் ஓய்கிறது. மூச்சு நின்று போகிறது. இந்த நிலை ஒரு நாளில் எய்துவதில்லை. காலம் காட்டும் கருவி-கடிகாரம் டிக் டிக் என்ற சப்தத்துடன் நகர்கிறது. முள்ளா நகர்கிறது? மனிதனின் வாழ்வு நகர்கிறது. இறுதி நிலை நோக்கி நகர்கிறது.

காலத்தின் நில்லாமையை அப்பரடிகள் விளக்கும் முறை எளிதில் விளங்குவதாய் அமைந்துள்ளது. கைகள்