பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ள வேண்டும். இதற்கு ‘நான்’ ‘எனது’ என்னும் செருக்கினை அடக்கி ஆண்டு தாழ்வெனும் தன்மை உடையதாக மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கி நல்லனவே எண்ணி, நல்லனவே செய்து இடையறாத திருவருள் சிந்தனையுடன் வாழ்ந்தால் மனம் பக்குவமாகி நல்வாழ்க்கைக்குத் துணையாக அமையும். ஆணவத்தின் ஆற்றல் அடங்கிய நிலையில் இறைவனின் திருவருட் சத்தி ஆன்மாவிடத்தில் கருணை பொழியும். இந்தப் பரிபக்குவ நிலையிலும் உயிர்கள்-ஆன்மாக்கள் ஓயாது தொழிற்படும். ஆயினும் பயன் கருதா நிலையில் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அனுபூதி வாழ்க்கையை எய்தும்.

தாம் அடையும் நல்லனவற்றிற்கு மகிழ்தல், அல்லனவற்றிற்குத் துயருறுதல் நெறியுமன்று; முறையுமன்று. வெற்றியும் தோல்வியும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருபவையல்ல. தொடர்கதைதான். வெற்றி - தோல்வி என்ற மனப்போக்கு சச்சரவுக்குக் காரணமாக அமையும். ஒருவனுடைய வெற்றி, தோற்றவனுடைய உள்ளத்தில் அவமானமாக உறுத்தி அவன் மீண்டும் தன் தோல்வியை வெற்றியாக்க முயல்வான். மீண்டும் போர்! ஆதலால், வெற்றியை வெற்றியாகக் கொள்ளாது தோற்றவர்கள் வெற்றி பெற்றதைப் போல மகிழ்தலுக்குரியன செய்து உயர்த்துக! வாழ்த்துக!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

(379)

என்று வள்ளுவம் கூறும். தீதும் நன்றும் கண்டு நோதலும் தணிதலும் வேண்டா என்று புறநானூறு கூறும். ஆன்மிகத்தில் வளர்ந்த மாமனிதர்கள் துன்பங்களில் உழலும் பொழுதும் தம் நிலையில் பிறழார்; திரியார். கரை தவறி விழுவதால் கடல் கலங்கி விடுமா என்ன? ஒருபொழுதும் கடல் கலங்காது. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவோர்